1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (22:25 IST)

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்..! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி..

Jaishankar
மீனவர்கள் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீனவர்கள் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
 
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்து இலங்கை அரசு நாட்டுடைமையாக்கி வருகிறது.
 
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அண்மையில் கைதான மூன்று மீனவர்களுக்கு  இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் சிறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 
L murugan
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக மீனவர் சங்கத் தலைவருடன் சென்று  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு அளித்தார். மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவ சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.


இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், எல்.முருகன் அவர்களுடன் மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார். அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்தோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.