1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (12:12 IST)

காதல் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பல காதல் ஜோடிகள் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி மாற்று காதல் திருமணம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் சம்பத்தப்பட்ட காதல் ஜோடியினர் பெற்றோர்கள், உறவினர்களால் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பொது இடங்களில் காதல் ஜோடிகளைக் கண்டாலே, சிலர் அந்த காதல் ஜோடிகளை கொடூரமாக தாக்கி விடுகின்றனர். சாதி மாற்று காதல் திருமணம் செய்யும் ஜோடிகளை கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் ஊரை விட்டு தள்ளி வைப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதேபோல் தமிழ்நாட்டிலும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தருமபுரியில் இளவரசன் திவ்யா என்ற வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதால், தருமபுரியில் பெரிய கலவரம் உண்டாகி இளவரசன் மர்மமான முறையில் இறந்தார். மேலும் திருப்பூரில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த சங்கர் கௌசல்யா ஜாதி மாற்று திருமணம் செய்து கொண்டதால் கௌசல்யாவின் பெற்றோர் சங்கரை கூலிப்படை ஏவி கொடூரமாக கொலை செய்தனர். இது போன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 
எனவே இதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் புதிய ஆனை பிறப்பித்துள்ளது. அதன்படி, சாதி மாற்று திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பமென்றும், அதனைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. மேலும் சாதிமாற்றுத் திருமணம் செய்பவர்களை யாரேனும் துன்புறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளது.