1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (08:59 IST)

கட்டுறது அவங்களா இருக்கலாம்; இடிச்சது நாங்கதானே! – சிவசேனா எம்.பி சர்ச்சை

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே செல்ல மாட்டார் என சிவசேனா எம்.பி ஒருவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர். 1999ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என எல்.கே.அத்வானி மக்களை திரட்டியபோது அதில் ஆர்வமாய் செயல்பட்ட இந்துத்துவ இயக்கங்களில் சிவசேனாவும் முக்கியமானது. ஆனால் சிவசேனாவிற்கு இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ”அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் உத்தர பிரதேச மந்திரியே கொரோனா பாதிப்பால் இறந்துள்ள நிலையில் ராமர் கோவில் விழாவில் குறைவான நபர்கள் கலந்து கொள்வதே சரியானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் “ராமர் கோவில் கட்ட அடித்தளம் அமைத்தது சிவசேனாதான். பாபர் மசூதியை தகர்த்தது சிவசேனாவினர்தான் என பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே கோவில் கட்ட நாங்கள்தான் பாதை அமைத்துக் கொடுத்தோம். ராமர் கோவில் அமைவதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். யாரும் அழைப்பிதழுக்காக காத்திருக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த கொரோனா சூழலில் உத்தவ் தாக்கரே நேரில் கலந்துகொள்ள மாட்டார் என்பதையே சஞ்சய் ராவத் மறைமுகமாக பேசியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.