1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 19 நவம்பர் 2016 (18:04 IST)

மோடியின் ‘பைத்தியகார துக்ளக்’ நடவடிக்கை: கிளர்ச்சிகள் வெடிக்கும் என எச்சரித்த யெச்சூரி

பிரதமர் மோடியின் ‘பைத்தியகாரத்தனமான துக்ளக் பாணி’ நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் நாடு முழுவதும் மிகப் பெரும் கிளர்ச்சிகள் வெடிப்பதை தடுக்க முடியாது என்று சீத்தாராம் யெச்சூரி எச்சரித்துள்ளார்.


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி முன்பு வெள்ளியன்று மாபெரும் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு காரணமாக பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள கருப்புப் பணம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனைக்கும் இந்த வழியில் தீர்வுகாண முடியாது.

தற்போதைய நிலையில், போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய வங்கி கட்டமைப்பு முழுவதும் சென்றடைந்து மக்களது கைகளுக்கு செல்லும் வரை பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இதை மறுத்து, ஒட்டுமொத்த வங்கி கட்டமைப்பையும், இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களையும் துயரத்தின் பிடியில் தள்ளிவிட்டுள்ள பிரதமர் மோடியின் பாசிசத் தனமான அணுகுமுறை தொடருமானால், அதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது.

பிரதமர் மோடியின் ‘பைத்தியகாரத்தனமான துக்ளக் பாணி’ நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் நாடு முழுவதும் மிகப் பெரும் கிளர்ச்சிகள் வெடிப்பதை தடுக்க முடியாது” என்றும் எச்சரித்தார்.