1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick

ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த புதிய அமைப்பு! – மத்திய அமைச்சர் தகவல்

ஆன்லைன் ஓடிடி தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஓடிடி தளங்களை கண்காணிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் ஓடிடி தளங்கள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஓடிடி தளங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் இடம் பெறுவதாகவும், ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு தணிக்கை தேவை எனவும் பலர் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் ஓடிடி தளங்கள், யூட்யூப் சேனல்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் புதிய அமைப்பை உருவாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அனைத்து இணைய தொடரும், படங்களும் தணிக்கை செய்யப்பட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.