1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (16:31 IST)

கைகளில் 12 விரல்கள் ; கால்களில் 20 விரல்கள் – ஐந்தாயிரத்தில் ஒருவர்!

ஒடிசாவின் கிராமப்புறத்தில் வாழ்ந்து வரும் மூதாட்டி ஒருவருக்கு கைகளிலும், கால்களிலும் நிறைய விரல்கள் இருப்பதால் அவரை அந்த கிராமமே ஒதுக்கி வைத்துள்ளது.

ஒடிசாவில் உள்ள கடப்பாடா கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி குமாரி நாயக். இவர் பிறக்கும்போதே இவரது கைகளில் 12 விரல்களும், கால்களில் 20 விரல்களும் இருந்துள்ளன. அதனால் இவரை அந்த கிராம மக்கள் சூனியக்காரி என ஒதுக்கி வைத்துள்ளனர். கடந்த 65 ஆண்டுகாலமாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் குமாரி நாயக் மக்கள் கண்களில் படாமல் வீட்டுக்குள்ளேயே பெரும்பான்மையான நேரங்களை கழித்து வருகிறார்.

தன் வேதனையான வாழ்க்கை குறித்து கூறியுள்ள குமாரி நாயக் ”இது இயற்கையானது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள மூடநம்பிக்கைவாதிகள் பலர் என்னை சூனியக்காரி என்று மக்களிடையே பரப்பிவிட்டனர். என்னை மொத்த கிராமமும் ஒதுக்கி வைக்கிறது. என்னை அவர்கள் அருவருக்கத்தக்க ஒன்று போல பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதானாலேயே வீட்டிற்குள் பெரும்பாலும் பதுங்கி வாழ்கிறேன்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியபோது “இதுபோன்ற மரபணி குறைபாடு 5 ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும்” என தெரிவித்துள்ளார். தற்போது இதுபோன்ற உடல்ரீதியான குறைபாடுகள் மரபணு பிரச்சினைகளால் ஏற்படுவது என்பது ஒருசில மக்களுக்கு புரிய தொடங்கிவிட்டாலும், இன்னும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருக்கும் கிராமங்களும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.