1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:54 IST)

மோடியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! தேர்தல் ஆணையத்தில் புகார்..!

Modi
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்பு பேச்சுக்களை பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது.
 
ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள் என்றும் இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 
 
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா? என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். மேலும், பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், "பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
மோடியின் இந்த பேச்சு  இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பதற்றத்தையும் பகைமையையும் உருவாக்குவதோடு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்களாகவும் எதிரிகளாகவும் பார்க்க இந்துக்களை தூண்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளார் என்றும் அவரது பிரச்சாரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது.