1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (08:29 IST)

மே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா? – தடுக்க வழி என்ன?

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வரும் மே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையிலும் மக்கள் வெளியே நடமாடி கொண்டிருப்பதால் நிலைமை சிக்கலுக்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட கோவிட்-இண்ட் 19 ஆய்வுக்குழு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்ற நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது. என்றாலும் பரிசோதனை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தனக்கு கொரோனா இருப்பதே தெரியாமல் மக்கள் பலர் உலாவக்கூடும் என அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மே இறுதிக்குள் இந்தியாவில் 13 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இத்தனை லட்சம் மக்களுக்கு தேவையான படுக்கைகள், மருத்துவ வசதிகள் இந்தியாவில் இல்லை என்பதால் பெரும் உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் இந்த எண்ணிக்கை குறையும் எனவும் கூறியுள்ளனர்.