1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:58 IST)

இந்த அரசு உண்மையில் கொடுக்க வேண்டியது என்ன? ஒரு பத்திரிகையாளரின் ஆவேச பேச்சு!

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் சாதி, மத மோதல்கள் குறித்த செய்திகள், வன்முறைகள் குறித்த செய்திகளே இடம்பெற்று வருகின்றன. ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய அரசுகளும், அரசியல்வாதிகளும் இதனை தடுக்க வேண்டியவர்களும் ஓட்டுக்காக சாதி, மத மோதல்களை தூண்டி விடுகின்றனர். இந்த நிலையில் வட இந்திய சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் அரசும் அரசியல்வாதிகளும் உண்மையில் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து ஒரு ஆவேசமான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
 
 
மதிப்பிற்குரிய பார்வையாளர்களே! இதற்கு முன்பு எனக்கு இவ்வளவு கோபம் வந்ததே இல்லை. இந்த தேசத்தில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விவாதமும் மதத்தைப் பற்றியும், மத வேறுபாடுகள் பற்றியும் தான் இருக்கின்றன என்பதில் ஏதாவது ஆச்சரியம் உள்ளதா? நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம்
 
 
முஸ்லிம்கள் எப்போதும் வன்முறையாளர்கள் எனவும், கிறிஸ்தவர்கள் நம் அனைவரையும் மதம் மாற்றி விடுவார்கள் என்பதும், இந்துக்கள் இந்தியாவை இந்தியாவைக் காப்பாற்றி விடுவார்கள் என்றும் போதனைகளை நமக்கு திணித்துக் கொண்டிக்கின்றனர். வேலையின்மை குறித்தும், விவசாயிகள் குறித்தும், பணமதிப்பு நீக்கம் விளைவுகள் குறித்தும் எந்த ஒரு அரசியல்வாதியாவது ஆக்கபூர்வமாக விவாதத்தை கடைசியாக எப்பொழுது நீங்கள் கேட்டீர்கள் என்று நினைவில் உள்ளதா?
 
 
இன்றைக்கு என்ன நடக்கின்றது? நிதி அமைச்சரும் அரசியல் பொருளாதார ஆலோசகரும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் விவாதித்து ஒருமித்த கருத்துக்கு வர முடியாதா? இதுகுறித்து யார் பேசப் போகிறார்கள்? ஒவ்வொரு நாளும் வங்கிகள் பணத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அது நமது பண்ம்,. இது யார் பேசப் போகிறார்கள்?
 
 
அரசாங்கங்கள் கொடுக்க வேண்டிய கல்வி, மருத்துவம், சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், நியாயமான விலையில் உணவு இவைகள் அடிப்படைத் தேவைகள். ஆனால் ஒன்றாவது இந்திய குடிமகனுக்கு இன்று கிடைக்கின்றன என்று நீங்கள் உணர்கிறீர்களா? இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் கூட சுத்தமான காற்றை பெற முடியவில்லை. சுத்தமான நீர் இல்லை, கல்வியில்லை, உடல் ஆரோக்கியம் இல்லை இல்லை. எப்பொழுது இதுகுறித்து பேசப்போகிறோம்?
 
 
இவர்கள் பேசுவது,விரும்புவது எனது மதம் பற்றியும், எனது சாதி பற்றியும் தான். இதை வைத்துக்கொண்டு நான் இவருக்கு அல்லது அவருக்கு ஓட்டுபோடுவது பற்றி என முடிவு செய்ய முடியும். இவர்களுக்கு நாம் மனிதர்களாக தெரியவில்லையா? நமது குடும்பங்கள் மனிதர்களாக இல்லையா? ஒவ்வொரு தேர்தலிலும் நமது வாக்குகளை வஞ்சகங்கள் மூலம் பெறுவதற்கு தான் இவர்கள் முயல்கின்றனர். அவர்கள் உங்களுக்கு மற்றவர்களை எப்படி வெறுப்பது? என வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புகின்றனர். இவ்வாறு அந்த பத்திரிகையாளர் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்