வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (11:43 IST)

விண்வெளி துறையில் முக்கியமான கட்டத்தில் இந்தியா உள்ளது! – இஸ்ரோ தலைவர் சிவன்!

இந்திய விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதனால் இந்திய விண்வெளி துறையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் நாசா போன்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனத்திடன் இணைந்து செயலாற்றி வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆய்வில் இது குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து நேரலையில் பேசிய அவர் “மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா விண்வெளித் துறை, இந்தியாவின் தொழில்துறை தளத்தை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறையைத் திறப்பதன் மூலம் இஸ்ரோவின் சாதனைகளை மேம்படுத்துவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை உருவாக்குதல் மற்றும் ஏவுதல், அதேபோல் விண்வெளி அடிப்படையிலான சேவைகளை வர்த்தக அடிப்படையில் வழங்கவும், தனியார்துறை நடவடிக்கைகளை, விண்வெளித்துறை ஊக்குவிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.