1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (10:57 IST)

சாமி சத்தியமா கட்சி மாற மாட்டோம்! – கோவிலில் வைத்து சத்தியம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி மாற மாட்டோம் என காங்கிரஸ் வேட்பாளர்கள் வழிபாட்டு தளத்தில் வைத்து சத்தியம் செய்துள்ளனர்.

கோவா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பலர் கட்சி விட்டு கட்சி தாவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் கடந்த 2017ம் ஆண்டில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொருவராக கட்சி மாறியதால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில் இந்த கோவா சட்டமன்ற தேர்தலில் 36 வேட்பாளர்களை களம் இறக்குகிறது காங்கிரஸ் கட்சி

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றிபெறுபவர்கள் வேறு கட்சிகளுக்கு மாறமாட்டோம் என சத்தியம் செய்துள்ளனர். கோவாவில் உள்ள கோவில், தேவாலயம் மற்றும் மசூதி ஆகிய மூன்றிற்குமே சென்று இந்த சத்தியத்தை அவர்கள் கூட்டமாக செய்துள்ளனர். எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று கடவுள் காலடியில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். வென்ற பிறகு எந்த சூழ்நிலையிலும் கட்சி மாறமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.