நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!
நிலநடுக்கம்
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்பட்டிருப்பதாகவும், இது ரிக்டர் அளவில் 7.1 புள்ளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6:35 மணிக்கு நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, அஸ்ஸாம் உள்பட சில மாநிலங்களில் உணரப்பட்டதாகவும், குறிப்பாக பீகாரில் உள்ள சில மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்தவித சேதமும் இல்லை என்று கூறப்பட்டாலும், நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் இருந்து சேத விவரங்கள் இன்னும் வெளியே வரவில்லை. இந்திய யுரேசியா டெக்டோனிக் தட்டுகள் மோதியதால் தான் இமயமலை உருவானதாக கூறப்படும் நிலையில், அந்த பகுதியில் தான் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
