1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (16:14 IST)

ராகுல்காந்தி எம்பி தகுதி நீக்கம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை! எதிர்க்கட்சிகள் பேரணி

கடந்த 2019 ஆம் ஆண்டு 'மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்' என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது . இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்து என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில்  இன்று, மக்களவை செயலாளர்,அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக்கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து   இன்று மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.