1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (11:22 IST)

Case History: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்புலம் என்ன? ப.சிதம்பரத்தின் பங்கு என்ன??

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
ஐஎன்எக்ஸ் மீடியா என்பது பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்ராணி முகர்ஜி பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம். கடந்த 2007 மார்ச் மாதம், ரூ.10 நிகர மதிப்புள்ள ரூ.14.98 லட்சம் பங்குகளையும், 31.22 லட்சம் பங்குகளாக மாற்றக்கூடிய கடனீடுகள் இந்தியாவில் வசிக்காத முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு அடிப்படையில் விநியோகிக்க ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி கேட்டது.
 
கடந்த 2007 மே மாதம், ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது நிதித்துறை அமைச்சகமும், அவருடைய அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்மும் (Foreign Investment Promotion Board (FIPB)) இதற்கு அனுமதி வழங்கியது.  
அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாடுகளில் இருந்து ரூ.4.62 கோடி மதிப்புள்ள அந்நிய செலவானியை முதலீடாக பெற்றுக்கொள்ள ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சகம் அனுமதித்தது. 
 
இதேசமயம் ஐஎன்எக்ஸ் மீடியா தனது துணை நிறுவனமான ஐஎன்எக்ஸ் நியூஸ் என்ற நிறுவனத்திற்கு கேட்டிருந்த அந்நிய முதலீட்டை FIPB நிராகரித்து. அனுமதி நிராகரிக்கப்பட்ட போதும் ஐஎன்எக்ஸ் மீடியா, மொரீசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3 நிறுவனங்கள் மூலம் ரூ.305 கோடி மதிப்புள்ள உள்ளே கொண்டுவந்து அந்திய செலவணியை ஐஎன்எக்ஸ் நியூஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்தது. 
இவை இரண்டுமே FIPB உத்தரவுக்கு எதிரான விதி மீறல்கள் என்பதால் பொருளாதார புலனாய்வு அமைப்பு (Financial Intelligence Unit), வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு ஆகிய மூன்று இடங்களிலும் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உட்கொள்ளப்பட்டது. 
 
மேலும், இந்த முதலீடுகள் அனைத்தும் முறைகேடானவை என்றும், ரூ.10 நிகர மதிப்புள்ள பங்குகளும் கடனீட்டு பத்திரங்களும் 86 மடங்கு அதிக விலை பேசப்பட்டு தலா ரூ.862.31 க்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் சிபிஐ தனது குற்றச்சாட்டை முன்வைத்தது. 
உடனடியாக FIPB இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்குமாறு ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்நிறுவனமோ விளக்கம் அளிக்க நேரடியாக வராமல் தங்கள் சார்பாக செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த வழக்கை பார்த்துக்கொள்ளும் என கூறியது. 
 
செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம்தான். கார்த்திக் சிதம்பரம், சிதம்பரத்தின் இன்ஃப்ளுயன்சை இந்த வழக்கில் பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 
வழக்கு சீரியஸான நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியாவின் இந்த முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கைகள் எடுங்கள் என்று உத்தரவிட வேண்டிய ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா இந்த அந்நிய செலவானி முதலீட்டுக்கு புதியதாக விண்ணப்பம் கொடுக்கவும் என உத்தரவு பிறப்பித்தார். 
 
இது மேலும் வழக்கில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் 25 முறை ஜாமீன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளதாம். ஐஎன்எக்ஸ் மீடியா வின் இயக்குனர்களில் ஒருவரான இந்ராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவர் ஆனதால் ப.சிதம்பரம் தப்பிக்க முடியாமல் வழக்கில் சிக்கிக்கொண்டார். 
நேற்று ஜாமீன் மறுக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைதும் செய்யப்பட்டார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.