வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (13:17 IST)

விமானத்தில் பெண்ணிடம் ஆபாச படத்தைக் காட்டிய தொழிலதிபர்!

மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில் பெண்ணிடம் ஆபாசப் படத்தை மொபைல் போனில் காட்டிய தொழிலதிபர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 
 

 
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் மும்பையில் உள்ள தனது கணவரைச் சந்தித்துவிட்டு நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். மும்பையில் இரவு 10.55க்குப் புறப்பட்ட அந்த விமானம், நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னை வந்திருக்கிறது. 
 
அந்த விமானத்தில் மடிப்பாக்கம் பெண்ணுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர், தனது மொபைலில் ஆபாசப் படத்தைப் பார்த்திருக்கிறார். அருவருக்கத்தக்க அளவில் அந்த பெண்ணுக்குத் தெரியும் அளவில் அவர் ஆபாசப் படத்தைப் பார்த்திருக்கிறார். 
 
இதைக் கண்டு அந்தப் பெண் முகம் சுழிக்கவும், மொபைலைத் திருப்பி அந்தப் பெண்ணிடமே அந்த நபர் ஆபாசப் படத்தைக் காட்டியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், அந்த நபர் குறித்து விமான ஊழியர்களிடம் புகார் கூறியிருக்கிறார். இதையடுத்து சென்னையில் தரையிறைங்கியவுடன் அந்த நபரை விமான ஊழியர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் தொழிலதிபர் என்றும், தொழில் நிமித்தமாக சென்னை வந்தார் என்பதும் தெரியவந்திருக்கிறது. தனது செயலுக்கு அவர் அந்தப் பெண் மற்றும் போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடி இருக்கிறார். இதனால், அவரை போலீஸார் கடும் எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.