வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:20 IST)

உங்களில் யார் மினி பாகிஸ்தான்? மன்னிப்பு கேட்கணும்! – மல்லுக்கட்டும் சிவசேனா – பாஜக!

அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மும்பையை மினி பாகிஸ்தான் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. கங்கனா ரனாவத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் “இங்கு மும்பையிலேயே வசித்துக் கொண்டு, வேலை பார்த்து சம்பளம் பெற்றுக் கொண்டு இந்த நகரை தவறாக பேசினால் மன்னிப்பு கேட்க சொல்வேன். மும்பையை மினி பாகிஸ்தான் என சொல்லும் கங்கனாவுக்கு குஜராத்தின் அகமதாபாத்தை மினி பாகிஸ்தான் என சொல்ல தைரியம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என பேசியுள்ளது குஜராத்தில் ஆளும் பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பேசியுள்ள குஜராத் பாஜக செய்தி தொடர்பாளர் பாரத் பாண்ட்யா “சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என்று சொல்லி குஜராத் மக்களையும், அகமதாபாத் மக்களையும் அவமானப்படுத்தி விட்டார். அவரது இந்த செயலுக்காக குஜராத் மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார். இதனால் பாஜக – சிவசேனா இடையே வார்த்தை மோதல் எழுந்துள்ளது.