1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (11:35 IST)

இந்த ரௌடி பய புலின்னா.. பகத்சிங், நேதாஜியெல்லாம் யாரு? – பீகார் டிஜிபி ஆவேசம்!

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடியை சிலர் பெரிய ஹீரோ லெவலுக்கு புகழ்ந்து பதிவிட்டு வருவதற்கு பீகார் டிஜிபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே ஒரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் போலீஸுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீஸார் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தப்பி சென்ற விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி பிடிக்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விகாஸ் துபே அண்டை மாநிலமான பீகாருக்கு தப்பி செல்லலாம் என்பதால் பீகார் போலீஸாருக்கு இதுகுறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள விகாஸ் துபேவை அவனது சாதியை சேர்ந்த சிலர் புலி என வர்ணித்தும், பெரிய ஹீரோ லெவல் பில்டப்புகளை கொடுத்தும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “விகாஸ் துபேவின் சாதியை சேர்ந்த சிலர் அவனது குற்ற செயல்களை துளியும் பொருட்படுத்தாமல் அவனை பெரிய நாயக பிம்பத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளுக்காக அவர்கள் பிரார்த்திப்பது குற்றத்தை ஊக்குவிக்கும் செயலாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “எட்டு போலீசாரை கொன்ற குற்றவாளி புலி என்றால், நாட்டுக்காக போராடிய பகத்சிங், நேதாஜி மற்றும் அஸ்பகுல்லா கான் ஆகியோர் யார்?” என கோபமாக கேள்வியெழுப்பியுள்ளார்.