வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (21:13 IST)

அமித்ஷாவின் சவாலை ஏற்றுக்கொள்வாரா ராகுல்காந்தி?

குடியுரிமை சட்டத்தால் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் சில மேடைகளில் இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தால், எவருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்ற வரி இருக்கிறது என்பதை ராகுல்காந்தியால் காட்ட முடியுமா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இமாச்சலப்பிரதேச மாநிலம் ஷிம்லாவில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லீம்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று வதந்திகளைப் பரப்பி வருகிறது.
 
மக்களை தவறாக வழிநடத்தி, பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை அரசின் இணையதளத்தில் கூட பார்க்க முடியும் என்பதால், சிறுபான்மையினர் படித்து பார்க்க வேண்டும். அதில் ஒரே ஒரு வார்த்தை கூட குடியுரிமை பறிக்கப்படும் என்பது இருந்தால் அதை ராகுல்காந்தி காண்பிக்கட்டும்’ என்று அமித்ஷா சவால் விடுத்துள்ளார். அமித்ஷாவின் இந்த சவாலை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்