1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (08:44 IST)

காங்கிரஸுக்கு குட்டு வைத்த கூட்டணி: சிஏஏ விவகாரத்தில் பின்வாங்கல்!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை தொடர்ந்து துணை மந்திரி அஜித் பவாரும் சிஏஏவுக்கு ஆதரவாக பேசியுள்ளது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் சிவசேனா ஆரம்பத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆரம்பம் முதலே சிவசேனா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தே வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே மராட்டியத்தில் என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்தலாம் என கூறினார். இது ஆரம்பம் முதலே என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், மராட்டியத்தின் துணை மந்திரியுமான அஜித் பவார் மராட்டியத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என்றும், சிஏஏ-வின் அவசியம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிஏஏவுக்கு எதிராக காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகராஷ்டிராவில் கூட்டணி கட்சிகள் சிஏஏவுக்கு ஆதரவாக பேசியிருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.