1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By c.anandakumar
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (20:53 IST)

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் ஆய்வு

கரூர்  மாவட்டத்திற்குட்பட்ட  சட்டமன்றத் தொகுதிகளில்  அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையங்களில்  பணியாற்றவுள்ள  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான  பயிற்சி  வகுப்பு நடைபெற்றது. 
கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு வெண்ணமலை  சேரன்  மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியிலும்.,  அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு  வள்ளுவர் மேலாண்மைக்  கல்லூரியிலும்.,  கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு  புலியூர்  இராணி மெய்யம்மை  மேல்நிலைப்பள்ளியிலும்.,  குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கு  குளித்தலை  அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும்  இந்த  பயிற்சி  வகுப்புகள்  நடைபெற்றது.
 
கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கரூர்  சட்டமன்ற தொகுதிக்கான  உதவி  தேர்தல்  நடத்தும்  அலுவலர்  சரவணமூர்த்தி முன்னிலையிலும்.,  வள்ளுவர்  மேலாண்மைக்  கல்லூரியில்  அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான  உதவி  தேர்தல்  நடத்தும்  அலுவலர் மீனாட்சி முன்னிலையிலும்  நடைபெற்ற  பயிற்சி  வகுப்புகளை  தேர்தல்  நடத்தும் அலுவலரும்.,  மாவட்ட ஆட்சித்தலைவருமான  அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
இதே போல புலியூர் இராணி  மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில்  கிருஷ்ணராயபுரம்  சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் மல்லிகா  முன்னிலையில்  நடைபெற்ற  பயிற்சி வகுப்பை  துணை  தேர்தல்  நடத்தும்  அலுவலரும்.,  மாவட்ட  வருவாய் அலுவலருமான  சூர்யபிரகாஷ்   பார்வையிட்டு  ஆய்வு  செய்தார். 
 
ஒவ்வொரு  வாக்குச் சாவடி  மையத்திலும்.,  வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று  நபர்கள்  நியமிக்கப்படுவார்கள். 
 
1,400க்கு மேல்  வாக்காளர்கள்  உள்ள வாக்குச்சாவடி  மையங்களில்  கூடுதலாக  ஒரு  வாக்குச்சாவடி  அலுவலர் மற்றும்  இதர  அலுவலர்கள்  நியமிக்கப்படுவார்கள்.
  
அதனடிப்படையில் மொத்தம்  உள்ள  1,037  வாக்குச்சாவடி  மையங்களிலும்  பணிபுரியவுள்ள 5,028  நபர்களுக்கும்  அழைப்பாணை  அனுப்பப்பட்டு  அதனடிப்படையில்  இந்த  பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டது. 
 
இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையத்தில்,  வாக்குச்சாவடி  அலுவலர்கள்  மேற்கொள்ள  வேண்டிய  பணிகள்  குறித்து படிப்படியாக  எடுத்துரைக்கப்பட்டது. 
 
மேலும்.,  மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கட்டுப்பாட்டுக்  கருவிகள்  வாக்காளர்  வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள்  ஆகியவற்றை  எவ்வாறு  கவனமாக  கையாள  வேண்டும்  என்பது குறித்து விரிவான வீடியோவுடன் அனைவருக்கும் மண்டல அலுவலர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு சம்மந்தப்பட்ட தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.