1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (12:24 IST)

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி.? தொலைபேசியில் பேச்சுவார்த்தை..!!

dmk congress
திமுக உடனான கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு முடியும் என்றும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் போலவே தலா 2 தொகுதிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.  
 
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், வைகோவின் மதிமுக கட்சிகளுக்கு இன்னும் தொகுதி இறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2019 தேர்தலில் 9 தொகுதிகளில்  போட்டியிட்டது. அதேபோல் புதுச்சேரியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதோடு, புதுச்சேரியிலும் வாகை சூடியது.
 
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூடுதலாக ஒரு தொகுதியை சேர்த்து 10 இடங்களையும், அதோடு புதுச்சேரியை சேர்ந்து மொத்தம் 11 தொகுதிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக 7 + 1 (அதாவது தமிழகத்தில் 7 , புதுச்சேரியில் ஒன்று) என 8 இடங்களை மட்டும் வழங்க முன்வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர்.
 
மல்லிகார்ஜுன கார்கேவும்  தமிழகத்தில் 10 + புதுச்சேரி என 11 தொகுதிகளை திமுகவிடம் பெற அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தம் 11 தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் திமுக பிடி கொடுக்கவில்லை. 
 
Selvaperundagai
இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விரைவில் திமுக உடனான கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு எந்த தாமதம் இன்றி எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.  மேலும் இந்தியா கூட்டணியில் தான் அனைவரும் இருக்கிறோம், தென்னிந்தியாவில் திமுக உடனான கூட்டணி 'Friendly'  கூட்டணி என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக காங்கிரஸ் இடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடைபெறாமல் தொலைபேசி வாயிலாக நடைபெறுவதால் இந்த கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காங்கிரஸின் நிபந்தனையை திமுக ஏற்குமா அல்லது திமுகவிற்கு காங்கிரஸ் அடிபணியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.