வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (15:36 IST)

வெற்றிப் பெறவைத்தால் 5 பவுன் தங்கம் – அதிமுக நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் ஆஃபர் !

தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிப்பெற வைக்கும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.  இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன.

என்னதான் கட்சித்தலைமை வேட்பாளர்களை நியமித்தாலும் அவர்களை வெற்றிப் பெற வைப்பது என்னவோ களத்தில் நின்று வேலைப்பார்க்கும் நிர்வாகிகள்தான். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் அதிருப்தி மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக பல வேட்பாளர்கள் தோற்ற வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளன. அதனால் தேர்தல் நேரத்தில் எப்போது கட்சித் தலைமை கீழ்மட்ட நிர்வாகிகளிடம் கனிவாக நடந்துகொள்வது வழக்கம்.

இது சம்மந்தமாக அதிமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலை முன்னிட்டு சில சலுகைகளை வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ‘அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறினாலே மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற முடியும். அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும்.’ என தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறியது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.