ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:16 IST)

எனக்குக் கனவில் மிதப்பது போல இருந்தது – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பரவசம்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. அதற்கான மூன்று அணிகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் அந்த தொடரில் நடக்க உள்ள டி 20 போட்டிகளில் தமிழக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது குறித்து பேசியுள்ள அவர் ‘நேற்று போட்டி முடிந்தபின் என்னிடம் வந்து சகவீரர்கள் உனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. எனக்குக் கனவில் மிதப்பது போல இருந்தது. னக்கு இந்திய அணியில் இடமா, எனக்கு இந்திய அணியில் இடமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னைத் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.