1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (14:43 IST)

கேதார கௌரிவிரதத்தை கடைப்பிடித்ததால் உண்டான நன்மையை விளக்கும் புராணக்கதை என்ன...?

Kedara Gowri fasting
கேதார கௌரிவிரதம், அனைத்து நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் விரதம் இது. இதை உணர்த்தும் ஒரு புராணக்கதையை பார்ப்போம்.


முன்னொரு காலத்தில், புண்ணியவதி, பாக்கியவதி என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர். இருவரும் அரசகுமாரிகள். தங்களின் தந்தை போரில் தோற்ற காரணத்தால், நாடிழந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள், இருவரும் ஆற்றங்கரையோரம் செல்லும்போது, அங்கு தேவ கன்னியர்கள் கேதார கௌரி விரதத்தை மேற்கொண்டிருந்தனர்.

அது என்ன விரதம் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தாங்களும் அதே விரதத்தைக் கடைபிடித்தனர். அதன் பலனாக, இருவருக்கும் புண்ணிய பலன் ஏற்பட்டது. இழந்த ஆட்சியை அவர்களின் தந்தை பெற்றார். இருவருக்கும் நல்ல கணவர்கள் அமைந்தனர். இதற்கெல்லாம் காரணமான உமாதேவியின் பூஜையான கேதார கௌரி விரதத்தை மறக்காமல் பின்பற்றினர். சில ஆண்டுகள் கழித்து, பாக்கியவதி கேதார கௌரி விரதத்தைக் கைவிட்டாள். கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றி அவரைக் கொடியில் வீசினாள். இதனால் அவளுக்கு வறுமை ஏற்பட்டது.

அவளது தங்கையான புண்ணியவதி, தொடர்ந்து விரதத்தைக் கடைபிடித்து வந்த தாள். செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தாள். அவள், தன் சகோதரிக்கு வேண்டிய செல்வம் கொடுத்து உதவ முயன்றும் அனைத்தும் அவளுக்குக் கிடைக்காது போயின. காரணம் என்ன என்று யோசித்தவளுக்கு, பாக்கியவதி கேதார கௌரி விரதம் கடைபிடிப்பதை விட்டுவிட்டது தெரிந்தது. மீண்டும் அவளை விரதம் கடைபிடிக்கச் சொன்னாள். இதன்மூலம் இருவரும் மீண்டும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். வறுமை நீங்கி செல்வம் சேரவும், சேர்ந்த செல்வம் நிலைக்கவும் கேதார கௌரி விரதத்தைத் தவறாமல் கடைபிடிப்பது நல்லது.

Edited by Sasikala