வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:51 IST)

பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டே தேவையில்லை: எஸ்பிஐ வங்கி அதிரடி திட்டம்

ஏ.டி.எம்களில் அட்டையில்லா பரிவர்த்தனையை செயல்படுத்தும் யோனா திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர இருக்கிறது எஸ்.பி.ஐ வங்கி.

தற்போது ஏ.டி.எம்களில் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையே நடைமுறையில் உள்ளது. ஒருவேளை கார்டு தொலைந்து போனாலோ அல்லது உடைந்துவிட்டாலோ பணம் எடுப்பது சிக்கலுக்குரியதாகி விடுகிறது. மறுபடி கார்டுக்கு விண்ணப்பித்து பெறுவதற்கும் நாட்களாகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை மொபைலுடன் இணைத்த யோனா கேஷ் திட்டத்தை ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த வசதி நாடெங்கிலும் 16,500 ஏ.டி.எம் மையங்களில் செயல்பாட்டில் உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் யோனா அப்ளிகேசனை மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதற்கு 6 இலக்க அடையாள எண் வழங்கப்படும். பணம் தேவையென்றால் ஏ.டி.எம்மிற்கு சென்று யோனா பதிவு எண்ணையும், பாஸ்வேர்டையும் பூர்த்தி செய்து தேவையான பணத்தை பெற்று கொள்ளலாம். எடுக்கப்படும் பணம் குறித்த தகவல்கள் உடனடியாக குறுஞ்செய்தியாக மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையை தற்போது பல லட்சம் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த யோனா திட்டத்தை நாடு முழுவது உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் செயல்படுத்தவும், ஏடிஎம் கார்டுகளை கைவிடவும் பாரத ஸ்டேட் வங்கி முடிவெடுத்திருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்திற்கும் கார்டுகள் இல்லாமல் யோனா கேஷ் மூலம் பணம் செலுத்து வகையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.