1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By Webdunia
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:08 IST)

பருவநிலை மாற்றம்: சர்வதேச தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் இளைஞர்கள்!

இந்தியா, பிரிட்டன் உட்பட 11 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச தலைவர்களுடன் லண்டனில் விவாதித்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய போட்டியில் பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இளம் கிளைமேட் சேம்பியன்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவின் சர்வதேச கிளைமேட் சேம்பியனாக ஜஸ்வந்த் மாதவன் (சென்னை), கரண் சேகல் (டெல்லி), நித்தி பட்டேல் (வதோதரா), அர்ச்சனா ஜெயராமன், ஸ்ருதி, அகஸ்த்யா, முத்தன்னா, ஆன் ரேமாண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் லண்டனில் நடைபெற்று வரும் சர்வதேச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜப்பானின் கோப் நகரில் மே 18 முதல் 26ம் தேதி வரையில் ஜி-8 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டிலும் பங்கேற்கின்றனர். இவற்றில் சர்வதேச தலைவர்களுக்கு காலநிலை மாற்றங்கள், அவற்றின் விளைவுகள், தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கின்றனர்.

பிரிட்டனின் சர்வதேச கிளைமேட் சேம்பியன் ஸ்டெபனி லன்ச் கூறுகையில், "பாரம்பரியமிக்க இளைஞர்கள் சமுதாயாத்திற்காக போராடுபவர்கள். ஆனால், பருவநிலை மாற்றம் உலகளவில் அனைத்து தலைமுறையினராலும் விவாதிக்கப்பட வேண்டும். இந்த விவாதத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் பகிர்ந்துகொள்ளவும், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது. அதில் இளைஞர்களின் பேச்சு உயர்ந்து ஒலிக்க வேண்டும்" என்றார்.
சுற்றுச்சூழல், உணவு, கிராமப்புற மேம்பாட்டு செயலர் ஹிலாரி பென், சுற்றுச்சூழல் முகமை தலைவர் ஜான் ஹார்மன் உட்பட பல்வேறு நிபுணர்கள் இதில் பங்கேற்று கடல்மட்ட உயர்வால் ஏற்படும் விளைவுகள், தீர்வுகள் உட்பட தங்களது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அப்போது, கடல்மட்ட உயர்வால் லண்டன், மும்பை, நியூயார்க், கோப் போன்ற நகரங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

ஹிலாரி பென் கூறுகையில், "பருவநிலை மாற்றங்கள் குறித்து எங்களது தனிப்பட்ட முடிவால் இளைஞர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். ஜி-8 உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த கிளைமேட் சேம்பியன்கள் தங்களது பேச்சால் உலகிலுள்ள இளைஞர்களுக்கும் ஊக்கம் அளித்து வருகின்றனர்" என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சில் முதன்மை பிரதிநிதி மார்ட்டின் டேவிட்சன், "முன்பே தீர்மானிக்க முடியாத சவால் நிறைந்த பருவநிலை மாற்றம் அனைவரையும் பாதிக்கக்கூடியது. பாதிப்பை உணர்ந்த இளைஞர்கள் அவற்றின் தாக்கத்தை குறைக்க போராடி வருகின்றனர். சர்வதேச கிளைமேட் சேம்பியன்கள் ஏற்கனவே அவர்களது பள்ளி, வீடு, சுற்றுப்புறங்களில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்" என்றார்.

தங்களது சொந்த நாடு திரும்பியதும் கிளைமேட் சேம்பியன்கள் உட்பட மற்றவர்களும் இந்த பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இளைஞர்களிடம் புதிய அமைப்பை ஏற்படுத்த உள்ளனர். ஒரு ஆண்டில் கிளைமேட் சேம்பியன்கள் பருவநிலை தொடர்பு திட்டத்தை அமல்படுத்தவும் உள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு: www.britishcouncil.org/climatechampions