1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (07:40 IST)

என் புகைப்படத்தை வைத்துதான் டி 20 கிரிகெக்ட்டை ப்ரமோட் பண்ணுகிறார்கள்… பிசிசிஐக்கு கோலி நறுக் பதில்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி பரபரப்பாக கடைசி ஓவர் த்ரில்லராக முடிந்தது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை ஆர் சி பி அணி கடைசி 4 பந்துகள் மிச்சமிருக்க எட்டியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடக்கம். இந்த சிறப்பான இன்னிங்ஸ் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர் “என்னுடைய புகைப்படத்தை வைத்துதான் உலகின் பல பகுதிகளில் டி 20 கிரிக்கெட்டை ப்ரமோட் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அதற்கேற்றார் போல நான் டி 20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக உணர்கிறேன். 2 மாதம் ஓய்வில் இருந்துவிட்டு வந்ததும் ரன்கள் சேர்ப்பது மகிழ்ச்சியான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.