முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்ததால், மொத்தம் 249 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45.2 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது. வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
விருது வென்ற பின்னர் பேசிய அவர் “எனக்கு முதல் நாளிரவுதான் நான் ஆடப் போகிறேன் என்ற மெஸேஜ் வந்தது. இதை நான் எதிர்பார்த்திருந்தாலும் ஒரு பக்கம் பதற்றமாக இருந்தது. போட்டி செல்ல செல்ல நான் கொஞ்சம் பதற்றம் தனிந்தேன். சீனியர் வீரர்கள் என்னிடம் பேசியது எனக்கு உதவியது. இது சுழல்பந்து வீச்சுக்கு ஆதரவான ஆடுகளம் இல்லை. ஆனால் சரியான இடத்தில் வீசினால் விக்கெட் கிடைக்கும் எனத் தெரியும். அதன்படி வீசினேன்” எனக் கூறியுள்ளார்.