1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 மே 2024 (19:28 IST)

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

Rohit sharma Star sports issue
தான் சக வீரர்களுடன் பேசுவதை ரெக்கார்ட் செய்து வெளியிட்டதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை கண்டித்து ரோஹித் சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நடப்பு ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் இன்றோடு முடிவடைகிறது. ஐபிஎல் சீசன்களை டிவியில் ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த போட்டிகளைல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த சீசனில் ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாத நிலையில் அவர் அடுத்த சீசனில் வேறு அணிகளுக்கு மாறலாம் என்ற பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பேச்சுகளை தூபம் போடும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் கேமராவை ரோஹித் பக்கமே திருப்பி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த கொல்கத்தா – மும்பை போட்டி மழையால் தாமதமானபோது ரோஹித் சர்மா கொல்கத்தா அணியினரின் ட்ரெஸிங் ரூம் சென்று அங்குள்ள வீரர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார். அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பியபோது, மும்பை அணி குறித்தும், அதில் இதுவே தனது கடைசி போட்டி என்றும் அவர் பேசுவது போல ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் நேற்று முன் தினம் லக்னோ அணி போட்டியில் மும்பை அணி மோதியபோது அங்கு தவால் குல்கர்னியிடம் ரோஹித் சர்மா பேசிக் கொண்டிருந்தபோது அங்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேமராமேன் சென்று படம் பிடித்துள்ளார். அதற்கு ரோஹித் “தயவு செய்து ஆடியோ ரெக்கார்டிங்கை நிறுத்துங்கள். ஏற்கனவே என்னை பெரிய பிரச்சினையில் தள்ளி உள்ளீர்கள்” என கூறியுள்ளார்.



இந்நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை வெளிப்படையாகவே குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரோஹித் சர்மா “கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக்கூடியதாகிவிட்டது, இப்போது கேமராக்கள் பயிற்சியின் போது அல்லது போட்டி நாட்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனியுரிமையில் நாம் செய்யும் ஒவ்வொரு அடியையும் உரையாடலையும் பதிவு செய்கின்றன.

 
எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேட்டுக் கொண்ட போதிலும், அது அப்போதும் ஒளிபரப்பப்பட்டது, இது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான உள்ளடக்கத்தைப் பெற வேண்டிய அவசியம் மற்றும் பார்வைகள் மற்றும் ஈடுபாட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது ஒரு நாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரோஹித் சர்மா மும்பை அணியில் இருப்பாரா என்பது பற்றி ஒருபக்கம் பேச்சு போய்க் கொண்டிருக்க மறுபக்கம் இப்படியாக வீடியோக்கள் வெளியாவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K