1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 மே 2024 (10:57 IST)

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Shivam Dube
நேற்றைய போட்டியில் சென்னை அணி அடைந்த எதிர்பாராத தோல்வியால் ப்ளே ஆப் வாய்ப்பு கை நழுவிய நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே வாதம் எழுந்துள்ளது.



முதலில் ஆர்சிபி பேட்டிங் இறங்கியபோதே சென்னை அணியிடம் பதிரனா, முஸ்தபிசுர் என போட்டிக்காட்டும் பவுலர்கள் இல்லாததால் ஆர்சிபியின் ரன்கள் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் சிஎஸ்கே பேட்டர்கள் நின்று விளையாடியிருந்தால் 218 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே.

ருதுராஜ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது சிஎஸ்கேவை பெரும் ப்ரெஷருக்கு உள்ளாக்கியிருந்தது. ஆனால் ரச்சின் ரவீந்திரா முந்தைய போட்டிகளில் சுமாராக விளையாடி இருந்தாலும் இந்த போட்டியில் சிறப்பாகவே விளையாடி வந்தார். 37 பந்துகளில் 61 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து களத்தில் நின்றிருந்தால் அணியை வெற்றி பாதையில் கொண்டு சென்றிருப்பார். ஆனால் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியை அளித்தார்.

முதல் ரன் ஓடிவிட்டு பேட்டிங் லைன் நோக்கி திரும்பியவர் பந்து வேகமாக வருவதை பார்த்து ஓடுவதை தவிர்க்க முயன்றார். ஆனால் ஷிவம் துபே பந்தையும் பார்க்காமல்,ரச்சினையும் பார்க்காமல் வேகமாக ஓடி வந்து விட்டதால் ரவீந்திராவின் விக்கெட் காலியானது.


ஆனால் ஆறுச்சாமி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஷிவம் துபே செய்ததுதான் ரசிகர்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தியது. உலக கோப்பை டி20க்கு தகுதி பெறும் வரையிலும் சிக்ஸர்களாக அடித்து தள்ளியவர் அதற்கு பிறகான 5 போட்டிகளில் 2ல் டக் அவுட். மற்ற போட்டிகளிலும் பெரிய ரன்களை எடுக்கவில்லை. இந்த போட்டியிலும் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி, சிக்ஸ் கூட அடிக்காமல் வெறும் 7 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

மிடில் ஆர்டரில் இறங்கும் ஷிவம் துபேவின் இந்த செயல்களால்தான் சிஎஸ்கே தோல்வியை தழுவியதாக பலரும் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நன்றாக விளையாட வேண்டிய நேரத்தில் சொதப்பிய மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், உள்ளிட்டோரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit by Prasanth.K