1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (10:35 IST)

கெய்ல் அதிரடியில் பணிந்தது கொல்கத்தா; பெங்களூரு அசத்தல் வெற்றி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
8ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 5ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது.
 

 
அந்த அணியில் அதிகபட்சமாக கவுதம் காம்பீர் 58 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 41, மணிஷ் பாண்டே 23, உத்தப்பா 35 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி்யில் படேல், வருண் ஆரோன், நெச்சிம், யுவேந்திர சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
 
பின்னர் 178 ரன்கள் என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டினர். டிவில்லியர்ஸ் 28, விராட் கோஹ்லி 13 ரன்களும் எடுத்தனர். ஆனால், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வழக்கம்போல் அதிரடியைக் காட்டி 96 ரன்களை குவித்தார்.
 
19 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் பதான் 2 விக்கெட்டுகளையும், மோர்கெல், கரியப்பா, சாகிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.