வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 10 மே 2015 (18:49 IST)

ஐபிஎல் அதிரடி: மும்பை அணியை கொத்துக்கறி போட்ட 360 டிகிரி டிவில்லியர்ஸ்!

ஐபிஎல் போட்டியில் இன்று நடந்த மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ரன்களை விளாசி மும்பை அணி வீரர்களின் பந்துவீச்சை கொத்துக்கறி போட்டார். இதில் 19 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
 

 
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கிறிஸ் கெயில் நிலைத்து ஆடவில்லை. ஒரு சிக்சர் அடித்ததோடு 13 ரன்களில் கெயில் வெளியேறினார். பின்னர் டிவில்லியர்ஸ் விராட் கோலியுடன் இணைந்தார். இந்த ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தது.
 
இதனால் பெங்களூரு அணியின் ரன் வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸ் கையில் கிடைத்த பந்துகளையெல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்தார். இதனால் மும்பை மைதானத்தில் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்து கொண்டிருந்தன. டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் சதமடித்து பிரமிக்க வைத்தார். அவரது சதத்தில் 3 சிக்சர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் அடிக்கும் 2வது சதம் இதுவாகும்.
 
மறுமுனையில் கேப்டன் விராட் கோலியும் அபாரமாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் 17.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. விராட் கோலியும் இந்த ஆட்டத்தில் ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார். ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் விராட் கோலி ஆவார்.
 
டிவில்லியர்ஸ் - விராட் கோலியின் அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களை எட்டியது. ஏபி டிவில்லியர்ஸ் 133 ரன்களும் விராட் கோலி 82 ரன்களையும் விளாசினர்.