வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (20:22 IST)

இறுதி சுற்றுக்கு இந்தியா செல்லுமா? ஐசிசி விதிமுறைகள் என்ன?

இன்று நடந்து வரும் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிவரும் நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை ஆட்டம் ரத்தானால் என்ன நடக்கும் என்பது குறித்த ஐசிசி விதிமுறைகள் என்ன? இதன்மூலம் இந்தியா இறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

பொதுவாக லீக் சுற்றுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டால் திரும்ப நடைபெறாது. புள்ளிகளை மட்டும் பகிர்ந்தளிப்பார்கள். ஆனால் அரையிறுதி சுற்றுகளுக்கு வேறு சில வழிமுறைகள் உள்ளன.

முதலாவது டாஸ் போடும் முன்னரே மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே எனப்படும் அடுத்த நாளில் புதிதாக நடைபெறும்.

இரண்டாவது ஒரு அணியினர் மட்டும் தங்களது ஆட்டத்தை முழுவதும் முடித்திருந்தாலோ அல்லது முடிக்கும் தருவாயில் இருந்தாலோ அந்த ஆட்டம் அப்படியே மறுநாள் தொடரும்.

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது இடையே மழைபெய்தால் விளையாடும் நேரம் அதிகரிக்கப்படும். அதாவது இரண்டு மணி நேரம் மழையால் தாமதமானால் போட்டி நேரம் இரண்டு மணி நேரம் அதிகப்படுத்தப்படும் அல்லது ஓவர்கள் குறைக்கப்படும்.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் தரவரிசை பட்டியலில் பெற்றிருக்கும் புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு ஒரு அணி தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் இன்று மழையால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டத்தை தொடங்க நடுவர் இந்திய நேரப்படி 8 மணி வரை காலக்கெடு கொடுத்திருக்கிறார். அந்த எட்டு மணிக்குள் மழை நின்று ஆட்டம் தொடர்ந்தால் ரன் இலக்கை குறைப்பது, ஓவரை குறைப்பது அல்லது நேரத்தை நீட்டிப்பது ஆகிய ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்படும். 8 மணிக்கும் மேலாகிவிட்டால் போட்டி நாளைக்கு நடைபெறவே வாய்ப்புகள் அதிகம்.

நாளையும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் தரவரிசைப்படி இந்தியா முதலிடத்தில் உள்ளதால் இந்திய அணி இறுதிக்கு செல்லும்.