1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (15:59 IST)

69 ரன்களுக்கு 6 விக்கெட்… ஆனா முடிக்கும் போது? – கடைசி ஓவர்களில் கலக்கிய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!

இந்திய அணியின் ஓவர்களை கடைசி கட்டத்தில் விளாசி மிகச்சிறப்பான ஒரு நிலைக்குக் கொண்டுவந்தனர் மகமதுல்லாவும், மெஹிந்தி ஹசனும்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணி 100 ரன்களுக்குள் கூட பங்களாதேஷை சுருட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் வந்த மகமதுல்லாவும், கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாட மெஹிந்தி ஹசனும் விக்கெட்டை இழக்காமல் மிக நிதானமாக ஆடி ஸ்கோரை நகர்த்தினர். ஒரு கட்டத்தில் துணிந்து ஆடிய அவர்கள் விறுவிறுவென ஸ்கோரை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய மகமதுல்லா 77 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹிந்தி ஹசன் தொடர்ந்து விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 83 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனால் எதிர்பாராத ஸ்கோர் ஆன 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டியது.

மூத்த பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், இந்திய அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசினாலும், கடைசி கட்டத்தில் சொதப்பி  அதிக ரன்களை கொடுத்தது அனுபவமின்மையைக் காட்டியுள்ளது.