1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (11:14 IST)

தல சிக்ஸ் அடிச்சா மட்டும் போதும்..! – தோனியால் எகிறிய 2 கோடி இதயத்துடிப்பு!

Dhoni
நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் தோனி அடித்த சிக்ஸர்களை காண கோடிக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் போட்டியின் முடிவு பலருக்கும் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதை காண முடிந்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் பலவீனமானது. ஆனால் மிடில் ஆர்டருக்கு பின் களமிறங்கிய ஜடேஜாவும், தோனியும் பார்ட்னர்ஷிப்பில் நின்று அடுத்தடுத்து பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி இலக்கை நெருங்கினர். ஆனால் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியோ அல்லது சிக்ஸோ அடிக்க முடியாததால் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் விழுந்ததுமே இனி சிஎஸ்கே வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்து விட்டது. அந்த சமயம் தோனி உள்ளே புகவும் இழந்த நம்பிக்கையை ரசிகர்கள் மீண்டும் பெற்றனர். ஐபிஎல் ஜியோ சினிமாவில் இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக பரபரப்பான ஆட்டங்களுக்கு 1.50 கோடி பார்வையாளர்கள் வரை இதில் லைவ் பார்க்கின்றனர்.

ஆனால் நேற்று தோனியின் வருகை ஸ்டேடிய ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், போனில் லைவ் மேட்ச் பார்ப்பவர்களையும் உசுப்பி விட்டுள்ளது. தோனி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டே இருக்க லைவில் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. தோனி கடைசி பந்தை எதிர்கொள்ள இருந்தபோது ஜியோ சினிமா மூலமாக மட்டும் 2.2 கோடி பேர் ஒரு அதிசயத்தை எதிர்பார்த்து மேட்ச்சை பார்த்துள்ளனர். இது பரபரப்பான மற்ற மேட்ச்களுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறப்படுகிறது. தோனியின் வருகை நேற்றைய மேட்ச்சையே மாற்றிவிட்டது என்றால் அது மிகையல்ல.

Edit by Prasanth.K