வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்பிணியின் முதல் மூன்று மாதங்கள் எதையெல்லாம் தவிர்க்கவேண்டும்...?

கர்ப்பிணிகளின் வாழ்க்கையில் முதல் 3 மாதங்களும் மிக முக்கியமானவை. இந்தக் காலத்தில் காலையில் மசக்கையும், சோர்வை ஏற்படுத்தும் சோகையும் அதிகமாக இருக்கும். இந்த அறிகுறிகள் இயல்பானவை என்றாலும் அலட்சியப்படுத்தக்கூடாது.

மசக்கையில் வாயில் நீர் ஊறுவது, ஓக்காளம், மயக்கம், வாந்தி, உணவில் வெறுப்பு, நெஞ்செரிச்சல், சாம்பல், மண் போன்ற பொருள்களின் மீது விருப்பம் போன்றவை தோன்றும்.
 
மசக்கையின் காரணமாக உண்டாகிற வாந்தி, குமட்டல், தாகத்துக்கு இன்றைய நவீன யுகத்துப் பெண்கள் நாடுவது செயற்கை குளிர் பானங்கள். வாய்க்கு விறுவிறுவென ருசி கொடுத்தாலும், அத்தகைய செயற்கை பானங்களில் சேர்க்கப்படுகிற செயற்கை சர்க்கரை, கல்லீரலில் கொழுப்பாக மாறும். அடிக்கடி, அதிகம்  குடித்தால் வயிறு புண்ணாகும். வாந்தி அதிகமாகும். பசி கெட்டுப் போய், உடல் மெலியும். கர்ப்ப கால மஞ்சள் காமாலை வரலாம். கணையமும் சேர்ந்து  பாதிக்கப்பட்டு, நீரிழிவும் வரலாம். 
 
எனவே இது போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கை பழச்சாறுகளை சாப்பிடுவதே ஆரோக்கியமானது. இயற்கை பழச்சாறுகளில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ சர்க்கரையானது, பழங்களில் உள்ள நார்ச்சத்தின் உதவியால், சுலபமாக ரத்தத்தில் கலக்கும். மசக்சையைப் போக்கும் மாதுளை, வெல்லம்,  எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, நாரத்தை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
 
இரும்புச்சத்து குறைந்தால், பசி இருக்காது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம், மாதுளை, கேழ்வரகு, பெருநெல்லி, தக்காளி, எலுமிச்சை, முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.