1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்ப காலத்தில் சரியான தூக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன...?

கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருகின்றது. 

கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதனால், அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படுகின்றது.
 
உடலில் பல மாற்றங்கள், குறிப்பாக ஹோர்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் இருக்கும்.
 
குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக  உள்ளது.
 
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு  நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலேயும் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.
 
கர்ப்பிணி பெண்களுக்கு பல நேரங்களில், கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று  நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.
 
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.
 
கர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. அதிலும் குறிப்பாக போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய  அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.