1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (11:32 IST)

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன்?

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேறொரு நோய்க்காக சிகிச்சைபெற்றுவந்த குழந்தையின் கை அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கவனக்குறைவான சிகிச்சையின் காரணமாகவே குழந்தையின் கை அகற்றப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 
உண்மையில் நடந்தது என்ன?
 
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயதுக் குழந்தை முகமது தஹீர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 
விவகாரத்தின் பின்னணி என்ன?
தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.
 
இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.
 
குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால், பெற்றோர் ராமநாதபுரத்திற்குத் திரும்பாமல், சென்னையிலேயே தங்கிவிட்டனர்.
 
இந்த நிலையில், கடந்த வாரம் குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய் குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதனையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டன. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.
 
இதற்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொறுத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்தாகவும் செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை தஸ்தகீர், "வியாழக்கிழமையன்று (மே 29) அந்த ஊசி பொருத்தப்பட்ட பிறகு குழந்தை ரொம்பவும் அழ ஆரம்பித்தது. அது வலியால் அழுகிறது என பெற்ற தாய்க்குத் தெரியாதா? இதனால், என் மனைவி திரும்பத் திரும்ப செவிலியர்களிடம் சென்று குழந்தை வலியால் அழுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், நான்காவது முறையாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றே காட்டினாள். அப்போது, இந்த ஊசியை அகற்றிவிட்டால் குழந்தைக்கு எப்படி மருந்தைச் செலுத்துவது என்று கேட்டார்கள். பிறகு, என் மனைவி வலியுறுத்தியதால் ஊசியை அகற்றினார்கள்.
 
பிறகு குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை காலையில் வந்த மருத்துவரிடம் அதைச் சொன்னோம். அவர் ஒரு மருந்தை வாங்கித் தேய்க்கச் சொன்னார். அதைத் தேய்த்தோம். பிறகு யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்று விரல் நுனியில் தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது வந்த மருத்துவர்களிடம் அதைக் காட்டினோம்.
 
11 மணிக்கு மேல் குழந்தையை ஸ்கேன் செய்தார்கள். அந்த ஸ்கேன் முடிவுகளைப் பார்த்த பிறகு, குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கையை எடுக்க வேண்டும் என்றார்கள். இது முழுக்க முழுக்க செவிலியர்களின் தவறால்தான் ஏற்பட்டது" என்று குற்றம்சாட்டினார்.
 
தற்போது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது.
 
அரசு மருத்துவமனை தரப்பு சொல்வது என்ன?
 
ஆனால், குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாடே குழந்தையின் கையில் ஏற்பட்ட பிரச்சனைக்குக் காரணம் என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணி ராஜன். இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் அவர் பேசினார்.
 
"குழந்தை 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டதால் கடந்த ஆண்டு இங்கு குழந்தை வந்தபோதே பல பிரச்சனைகள் இருந்தன. அந்த குழந்தையைச் சோதித்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது உறைந்திருந்தது. அதனால், தலையில் இருந்த 'வென்ட்ரிகிளை' அடைத்துக்கொண்டதால், நீர் செல்வது (Cerebrospinal fluid) செல்வது தடைபட்டிருந்தது."
 
"இதையடுத்து, குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கே குழந்தைக்கு 'வென்ட்ரிகிளோ பெரிடோனியல் ஷன்ட்' (ventriculoperitoneal shunt) பொருத்தப்பட்டது. அந்த சிகிச்சையின்போதே குழந்தைக்கு இதய முடக்கம் ஏற்பட்டது. பிறகு, தீவிர சிகிச்சை மூலம் குழந்தை உயிர்ப்பிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குழந்தை வீட்டிற்குச் சென்றது."
 
"ஒரு வாரத்திற்கு முன்பாக, குழந்தைக்குப் பொறுத்தப்பட்டிருந்த 'ஷண்ட்' வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டது. மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு, அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் ஷண்ட் பொருத்தப்பட்டது. குழந்தை முன்கூட்டியே பிறந்ததால், அந்தக் குழந்தையின் ரத்தத்தின் திரவ நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. Hyperviscosity என்ற நிலை ஏற்பட்டு, ரத்த ஓட்டம் மெதுவாக இருந்தது. வியாழக்கிழமையன்று தோலில் நிற மாற்றம் ஏற்பட்ட பிறகு ரத்தம் குழாய்களில் உறைந்திருக்கலாம் எனக் கருதி அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன."
 
"கையின் நிறம் மாறியது ஏன் என்பதை அறிய ஒன்றாம் தேதியன்று டாப்லார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது அறியப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதி அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால், அடுத்த நாள் நண்பகல் அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டது," என்று தெரிவித்தார்.
 
வியாழக்கிழமை காலை ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட நிலையில், பிற்பகலில் வலி இருப்பதாக சொன்னதால், அந்த ஊசி அகற்றப்பட்டதாகவும் வெள்ளிக் கிழமையன்று வலி, வீக்கத்திற்காக மருந்து அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்த தேரணி ராஜன், சனிக்கிழமையன்று குழந்தையின் விரல் நுனி கறுத்திருப்பது குறித்து மருத்துவமனையின் ரத்தவியல் மருத்துவர்தான் பார்த்து தெரிவித்ததாகக் கூறினார். ஊசியை அகற்றி இரு நாட்களுக்குப் பிறகே இது நடந்ததாகவும் அதற்குப் பிறகு டாப்ளர் ஸ்கேன் செய்யப்பட்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால், குழந்தையின் தந்தையான தஸ்தகீர் அதனை மறுக்கிறார். "குழந்தையின் கையைப் பார்த்து மருத்துவர்கள் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். அது தவறான தகவல். நாங்கள்தான் குழந்தையின் விரல் நுனி கறுத்துப் போய் தோல் உறிவதைக் கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் சொன்னோம்" என்கிறார் அவர்.
 
இந்த விவகாரத்தில் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தால், தனியார் மருத்துவர்களை அழைத்துவந்துகூட சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
 
தற்போது, இந்த விவகாரத்தில் அலட்சியம் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, ரத்த நாள சிகிச்சைத் துறையின் இயக்குநர், பொது மருத்துவத் துறையிலிருந்து ஒரு இயக்குநர், குழந்தைகளுக்கான குருதித் துறையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு ஜூலை 4ஆம் தேதி மாலைக்குள் அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குழந்தையின் பெற்றோர் ஜூலை நான்காம் தேதி இந்தக் குழு முன்பாக ஆஜராகி தங்கள் தரப்பு குறித்துத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. குழந்தை தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறது.