1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (21:45 IST)

ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ள இந்தியர்கள் காப்பாற்றக் கோருவது ஏன்?

சில இந்திய இளைஞர்கள் ரஷ்யா சென்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விடலாம் என நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
 
அவர்கள் முகவர்களின் வார்த்தைகளை நம்பியதால், தற்போது யுக்ரேனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பவதாகக் கூறுகிறார்கள்.
 
உதவியாளர் பணிக்கு அழைத்து வந்து, ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்ததாகவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள்.
 
தெலங்கானா உள்ளிட்ட கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர்.
 
பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்களை ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
 
இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு முகவர்கள் உள்ளனர்.
 
பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த நான்கு பேரையும் ஒருங்கிணைத்துள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.
 
ரஷ்யாவில் ஹெல்பர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களை அவர் ஈர்க்கிறார்.
 
அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களை வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
 
35 பேரையும் ரஷ்யாவுக்கு அனுப்ப முகவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
அவர்களில் மூன்று பேர் நவம்பர் 9, 2023 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினர். சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா, பின் மாஸ்கோவுக்கு 12 ஆம் தேதி சென்றுள்ளனர்.
 
நவம்பர் 16 அன்று, பைசல் கானின் அணி ஏழு பேரை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது.
 
அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
 
துபாயில் உள்ள முகவரான பைசல் கான், பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலைகள் பற்றி யாரிடமும் எங்கும் கூறவில்லை என இளைஞர்களின் குடும்பத்தினர் பிபிசியிடம் கூறினர்.