1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (13:23 IST)

அமெரிக்காவில் 'டோலிவுட் செக்ஸ் ராக்கெட்': குற்றச்சாட்டில் சிக்கிய நடிகைகள்

அண்மையில் அமெரிக்க போலீசார் கண்டறிந்த செக்ஸ் ராக்கெட் இந்திய திரைப்படத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த கதாநாயகிகளும், பிற நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கின்றனர். சிகாகோவை மையமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி தொடர்பாக ஒரு தெலுங்கு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவில் நடைபெறும் தெலுங்கு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அங்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் போலிஸ் கூறுகிறது.

"34 வயதான கிஷன் மோடுஹ்முடி எனும் ராஜு சென்னுபதி இந்த செக்ஸ் ராக்கெட்டின் மூளையாக செயல்படுகிறார்" என ஹோம்லேண்ட் செக்யூரிடியின் சிறப்பு ஏஜெண்ட் பிராயன் ஜின் கூறுகிறார்.

ராஜு சென்னுபதி மற்றும் அவரது மனைவி சந்த்ரகலா எனும் விபா ஜெயம் மீது இலினாய் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த செக்ஸ் ராக்கெட்டில் தொடர்புடைய பெண்களின் பெயர் ஏ,பி,சி,டி என்று குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பெண்களிடமும், வேறு சில குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டைரிகளில் பாலியல் தொழில் நடத்தப்பட்டது தொடர்பான சில குறிப்புகளும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதில் வாடிக்கையாளர்களின் பெயரும் எழுத்துப்பூர்வமாகவே சிக்கியிருக்கிறது.


2017, நவம்பர் 20ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து ஒரு பெண் சிகாகோவின் ஓ`ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

நீதிமன்றத்தில் போலிசார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் டெல்லியில் இருந்து சிகாகோ வந்த அந்த பெண்ணின் பெயர் `ஏ` என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பி1/பி2 சுற்றுலா விசா வைத்திருந்த அந்த பெண், ஒரு நடிகை.

தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள தெலுங்கு அசோஷியேசனின் அழைப்புக் கடிதத்தை வைத்திருந்தார். நவம்பர் 18ஆம் தேதி அந்த அமைப்பு நடத்தும் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான பத்து நாட்களுக்கான விசா, அந்த பெண்ணிடம் இருந்தது.

18ஆம் தேதி நடைபெற வேண்டிய நிகழ்ச்சிக்கு 20ஆம் தேதி அமெரிக்காவிற்கு வந்தது ஏன் என்ற சந்தேகம் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு ஏற்பட்டதுதான் மிகப்பெரிய செக்ஸ் ராக்கெட்டை வெளிக் கொண்டுவந்துள்ளது.

விசாரணையில், வடக்கு அமெரிக்காவின் தெலுங்கு சொசைட்டியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக அந்த நடிகை கூறினார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் இருந்தன. நவம்பர் 25ஆம் தேதி இலினாயில் உள்ள ஸ்கைம்பர்க் என்ற நகரின் நடைபெறும் மாநாட்டிற்கான அழைப்பிதழ் அது.

இதுதொடர்பாக தெற்கு கலிஃபோர்னியா தெலுங்கு அசோஷியேஷன் தலைவரிடம் போலிசார் விசாரணை நடத்தியபோது, தங்கள் அமைப்பின் சார்பில் 18ஆம் தேதியன்று ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய அவர், ஆனால் தற்போது வந்திருக்கும் நடிகைக்கு தாங்கள் அழைப்பு அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு அமெரிக்காவின் தெலுங்கு சொசைட்டியினரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நடிகை அமெரிக்காவிற்கு வந்ததே தங்களுக்கு தெரியாது என்றும், 25ஆம் தேதியன்று தாங்கள் எந்தவித நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் கூறிவிட்டனர். இதன் பிறகு நடிகையிடம் தீவிரமான விசாரணை நடத்தப்பட்டது. இந்தியாவில் தன்னை சந்தித்த ராஜு என்பவர் இந்த அழைப்புக் கடிதங்களை கொடுத்ததாக அவர் கூறினார்.

ராஜு என்பவர்தான் விமான பயணச்சீட்டுகளையும், தங்குமிடம் உட்பட பிற செலவுகளையும் செய்வதாகவும் அந்த நடிகை கூறினார். தன்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்காக அவர் வருவார் என்றும் சொன்னார். ராஜூவின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் அவர் போலிசாரிடம் கொடுத்துவிட்டார்.

போலிசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், கிஷன் மோடுஹ்மடி எனும் ராஜு சென்னுபதி, சில திரைப்பட நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில் ஆர்வத்துடன் செயல்பட்டுவந்தது தெரியவந்த்து. போலி விசாவில் திரைப்பட நடிகைகளை அமெரிக்காவிற்கு அழைத்து, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார் என்பதும், ஷிகாகோவில் விபா ஜெயம் என்ற பெண் அவருக்கு உதவி செய்வதும் தெரியவந்தது.

மின்னஞ்சல் முகவரியில் இருந்து சிகாகோவில் இருக்கும் ராஜு குடியிருக்கும் வீட்டின் விலாசம் கிடைத்தது.




2017 நவம்பர் 26ஆம் தேதியன்று மும்பையில் இருந்து நெவார்க் விமானநிலையம் வந்து இறங்கிய மற்றொரு நடிகையின் விசா ஆவணங்களை இமிக்ரேஷன் அதிகாரிகள் பரிசீலித்தபோது, அவர் இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருப்பது தெரிந்தது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், மற்றொரு நிகழ்ச்சியில் விருந்தினராகவும் அழைக்கப்ப்ட்டிருந்தார் அந்த நடிகை.

ராஜு என்பவர் விசா வாங்குவதில் உதவி புரிந்ததாக அந்த நடிகை அதிகாரிகளிடம் கூறினார். அந்த நடிகை டெக்சாஸில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஹாலிவுட் நடனத்தில் நடனமாடப் போவதாக தெரிவித்தார்.




ராஜு ஏற்பாடு செய்திருந்த ஒரு கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே ஒரு முறை பென்சில்வேனியாவுக்கு சென்றிருப்பதாக அந்த நடிகை தெரிவித்தார். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். சில வாடிக்கையாளர்களுடன் தனது நேரத்தை செலவிட்ட அந்த நடிகை அங்கிருந்து எப்படி வெளியேறுவது அவர்களிடமே உதவி கேட்டார். இந்தியா திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை வாங்கித்தருமாறு ராஜுவின் மனைவி விபாவிடம் கேட்கச் சொன்னார்கள் அந்த வாடிக்கையாளர்கள்.

அந்த அமெரிக்க பயணத்தில் விபாவுடன் நான்கு வெவ்வேறு நகரங்களுக்கு பயணித்தார் அந்த நடிகை. அங்கு விபாவின் வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு பல வாடிக்கையாளர்கள் அனுப்பப்படுவார்கள். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், அந்த நடிகைக்கு விசா இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொலைபேசி மிரட்டல்
டெல்லியில் இருந்த அந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. புகைப்படத்தில் அடையாளம் காட்டுமாறு கூறப்பட்டபோது, ராஜுவை அந்த பெண் அடையாளம் காட்டினார். விசா கிடைக்காதது தெரியவந்தபோது, தனது தொழிலைப் பற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் ராஜு என்றும் அவர் கூறினார்.

சிகாகோவில் விபாவின் வீட்டில் தங்கவைக்கப்பட்டபோது, தன்னை தனியாக வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்று அந்த நடிகை தெரிவித்தார். வெளியில் செல்லும்போது கண்காணிப்பதற்காக யாராவது கூடவே வருவார்கள் என்று அந்த நடிகை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மேலும் பல நடிகைகள்

பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு இரு கடிதங்களையும் காண்பித்தார். அவை விசா ஆவணங்களில் கொடுக்கப்பட்டவை. தெலங்கானா பீபிள்ஸ் அசோஷியேஷன் ஆஃப் டலாஸ் மற்றும் தெலுங்கு அசோஷியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா ஆகிய அமைப்புகளில் இருந்து வந்தவை. இரு அமைப்புகளுமே அந்த கடிதங்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தினார்கள்.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் பல பெண்கள் ராஜுவின் உதவியுடன் அமெரிக்கா சென்றுவந்தது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்களை, பி, சி, டி, ஈ என போலிசார் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர், அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை. 2017 டிசம்பர் 24ஆம் தேதி சிகாகோ சென்ற பாதிக்கப்பட்ட ஒரு பெண் (பி), 2018 ஜனவரி 8ஆம் தேதியன்று இந்தியா திரும்பினார்.


காலாவதியான விசாவில் அமெரிக்காவில் தங்கியிருந்த ராஜு, விபா

கிஷன் எனும் ராஜு, சில திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அவர் 2014ஆம் ஆண்டில் விசாவுக்காக இருமுறை விண்ணப்பித்திருந்தாலும், ஆவணங்கள் போலி என்று கூறி விசா மறுக்கப்பட்டது. பிறகு 2015இல் விசா கிடைத்து அவர் ஏப்ரல் ஆறாம் தேதியன்று சிகாகோ சென்றார்.

2015, அக்டோபர் ஐந்தாம் தேதியன்று அவரது விசா முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் அமெரிக்காவிலேயே இருந்தார். சந்த்ரகலா ஆகஸ்ட் 11ஆம் தேதி சிகாகோ சென்றார். அவரது விசா 2016 பிப்ரவரி 10ஆம் தேதியன்று காலாவதியானது, பிறகு அது ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை விசா நீட்டிக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர். ஆனால் இருவரும் அமெரிக்காவை விட்டு வெளியேறவில்லை.

ஒஹோயோ மாகாணம் டிஃபின் நகரில் ஜனவரி 23ஆம் தேதியன்று கிஷனும், சந்த்ரகலாவும் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க எல்லைப் பகுதி ரோந்து அதிகாரிகளிடம் அவர்கள் பிடிபட்டனர். பிப்ரவரி 23இல் அவர்களுக்கு ஜாமீன் விடுதலை கிடைத்தது, ஆனால் அவர்கள் விசாரணையில் சேர்க்கப்படவில்லை.

2018 பிப்ரவரி 16ஆம் தேதியன்று போலிசார் ராஜு மற்றும் விபாவின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, போலி குடியிருப்பு அட்டைகள், அமெரிக்க தெலுங்கு சங்கங்களின் போலி லெட்டர் ஹெட், போலி விசிட்டிங் கார்டுகள், டைரிகள், கணக்கு புத்தகங்கள் மற்றும் 70 ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன. டைரிகள் மற்றும் 4 மொபைல் போன்கள் மூலம் செக்ஸ் ராக்கெட் தொடர்பான தகவல்கள் கிடைத்தன.

ஒரு முறை பெண்களுடன் நேரம் செலவிட 100 அமெரிக்க டாலர் என்று வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுவார்கள். தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் குறுகிய நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் இருப்பார்கள், அதனால் அவர்களிடம் அதிக நேரம் இல்லை என்று வாடிக்கையாளர்களிடம் கூறுவார்கள். ஏன் தெரியுமா? ஒரு பெண்ணுடன் கூடுதல் நேரம் செலவழிக்க மேலும் 100 டாலர்கள் கட்டணம் கொடுக்கவேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் பேசியது, பணப் பரிமாற்றம் என பல்வேறு தகவல்கள் டைரியில் எழுதப்பட்டிருந்தது வழக்கிற்கு உதவியாக இருந்த்து.

வாடிக்கையாளர்களுடனான அவர்களின் உரையாடல் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். டைரிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் கிஷன் மற்றும் சந்த்ரகலா, இந்தியாவில் இருந்து பெண்களையும் நடிகைகளையும் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட செய்தது உறுதியாகியிருக்கிறது. குற்றவாளிகள் ஏப்ரல் 29ஆம் தேதியன்று இல்லினாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை இன்னமும் தொடர்கிறது.