செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (14:56 IST)

ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை: “நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது...”

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் சூர்யாவுக்கு இருக்கிறது. எனவே தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.


 
'காப்பான்'
 
சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர்.


 
வைரமுத்து பேசும்போது, " இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்து விட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.
 
மோகன்லால் பேசும்போது, "சூர்யாவை போன்று சினிமாவின் மீது அர்ப்பணிப்பும் காதலும் உடைய ஒரு நடிகரை என் 40 ஆண்டு அனுபவத்தில் பார்த்தது இல்லை. இந்த படத்தில் எனக்கு மகனாக ஆர்யா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத படப்பிடிப்பு காரணமாக அவரது திருமணத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
 
ஆர்யா பேசும் போது, "இந்த படத்தில் நடிக்க முடியுமா? என்று திடீர் என்று கே.வி.ஆனந்த் கேட்டார். உடனே சம்மதித்தேன். சூர்யாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். முக்கியமாக என் திருமணத்துக்கு நிறைய அறிவுரைகள் கூறினார். சூர்யாவும் ஜோதிகாவும் ஆதர்ச தம்பதிகளாக விளங்குகிறார்கள்" என்றார்.
 
பாடலாசிரியர் கபிலன் பேசுகையில், "புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோதி கேட்டிருப்பார்" என்று கூறினார்.
 

 
கல்விக் கொள்கை
 
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த 'காப்பான்' படம் நிச்சயம் வெற்றி பெறும். சூர்யா விடாமுயற்சியால் முன்னேறி இருக்கிறார். 'நேருக்கு நேர்' படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்படி இல்லை. அதன்பிறகு பாலாவின் 'நந்தா', 'பிதாமகன்' படங்களில் சிறந்த நடிகனாக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்தார்.
 
'காக்க காக்க', 'கஜினி', 'அயன்' என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்து இருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள். சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. 'ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோதி கேட்டிருப்பார்' என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோதி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார்.


 
"நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்": நடிகர் சூர்யா
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
'நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது'
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் சூர்யாவுக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருக்கிறார். 'நான் கடவுள்' படத்தில் அகோரியாக அவர் நடித்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.
 
நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து, 'ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா... அது கிடைக்கும்', என்று கூறிவிட்டு சென்றார். அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண், 'உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு எனக்கு ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் மகத்துவம். கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை படித்தேன். சிறப்பாக இருந்தது. அனைவரும் அதனை படிக்கவேண்டும்' என்று ரஜினிகாந்த் பேசினார்.