வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (14:56 IST)

பாகிஸ்தான் தாக்குதல்: இரு இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினோம்

பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான்  தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
2:30 PM: இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வடக்கே உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்திய ஆளுகையில் உள்ள  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் ஆகிய இடங்களிலும், அமிர்தசரசு, சண்டிகர் மற்றும் டேராடூன் ஆகிய  இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
 
2:00 PM: பிடிக்கப்பட்ட விமானியின் வீடியோ என்று பாகிஸ்தானால் பகிரப்பட்ட, வீடியோவில் விமானியின் பெயர் அபிநந்தன் என்று அவர்  தெரிவிக்கிறார்.
 
அந்த வீடியோ பாகிஸ்தானால் பகிரப்பட்டுள்ளது. அதன் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை.
 
1:30 PM: இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை  கைப்பற்றியுள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.  எனினும் இது குறித்து இந்தியத் தரப்பு எதையும் உறுதிசெய்யவில்லை.
 
பிடிபட்ட விமானிகளின் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னொருவர் தங்கள் காவலில் இருப்பதாகவும்  ஆசிஃப் கஃபூர் கூறினார்.
 
காவலில் இருக்கும் விமானியின் காணொளி என்று கூறப்படும் காணொளி என்று ஒன்றையும் அவர் வெளியிட்டார். அவரது கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.
1:23 PM - பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனினும் தமது நோக்கம் அமைதிதான் என கூறியுள்ள ஆசிஃப் கஃபூர்  ஊடகங்களும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார் என்றும், இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம்  என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்களை காட்டுகின்றன. இந்த தாக்குதலில் அந்த  ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தவே இல்லை என ஆசிஃப் கஃபூர் மறுத்துள்ளார்.
 
1:15 PM - நிலைமையை மோசமடையச் செய்யத் தாங்கள் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.
 
இந்திய எல்லைக்குள் ஆறு ராணுவ மற்றும் நிர்வாக நிலைகளை குறிவைத்தோம். அவற்றின் மேல் தாக்குதல் நடத்துவது நோக்கமல்ல என்பதால், திறந்த வெளியிலேயே தாக்குதல் நடத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
 
இது உண்மையான தாக்குதல் நடவடிக்கை அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்கும் திறனை வெளிக்காட்டும் செயல்பாடு மட்டுமே என  ஆசிஃப் கஃபூர் கூறினார்.
 
1:10 PM - அமைதியைக் கடைபிடிக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மீண்டும் வலியுறுத்துவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் தெரிவித்துளார்.
 
1:00 PM - கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் 12 முதல் 15 இடங்களில், செவ்வாய் இரவு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படைகளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
 
12:41 PM - இந்தியா தங்கள் நிலையை பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அங்கு விரைவில் தேர்தல் வருவதை  மனதில் கொள்ள வேண்டும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.
 
12:35 PM - பாகிஸ்தான் படைகளின் தயார் நிலையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிலைமையைத் தாங்கள் சீர் செய்யவே விரும்புவதாக கூறினார். பாகிஸ்தான் படைகள்  எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
 
இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியபின், தாமதமாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உள்ளது," என்றார்.
 
12:30 PM - பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய மதரஸாக்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்தியா  கூறுவது உண்மையல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.
 
பர்வேஸ் கட்டாக் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச்  சந்தித்தனர்.
 
12:25 PM - இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இரு விமானங்கள் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து  ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் உள்ளிட்ட விமான நிலையங்கள் பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
 
இந்த விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
 
12:20PM - கைபர் பகுன்குவா மாநிலத்திலுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள், செவ்வாய் காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன.
 
12:12 PM - "சில விமானங்கள் கீழே விழுந்துள்ளன. இப்போது எதையும் கூற முடியாது. தொழில்நுட்ப குழுவினர் நடந்ததை  அனுமானிப்பார்கள். இரு இறந்த உடல்களை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்தியுள்ளோம்," என பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த  காவல் அதிகாரி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
 
11:50 AM - பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃபூர், பாகிஸ்தான் வான் பரப்பில் இரு  இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரிலும்  விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.
 
11:44 AM - கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் வான் வெளியில் இருந்து இந்திய நிலைகளை நோக்கி தங்கள் விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.
 
இது இந்தியா தங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கான பதிலடி அல்ல என்று கூறியுள்ள அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள்  ஏற்படாத வகையில் ராணுவ அமைப்புகள் அல்லது இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
 
எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று அவர்கள் கூறும் இடங்களைத் தாக்கினால், இந்திய ஆதரவுடன்  பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பதிலுக்குத் தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை உண்டு என ஃபைசல்  தெரிவித்துள்ளார்.
 
11:40 AM - இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில்  இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட்  விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
 
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூன்று மணிநேரம் மூடப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று  ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.