நீண்ட இடைவெளியான டோஸ்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குமா?
ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்து நீண்ட இடைவெளியான டோஸ்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கும் என தகவல்.
ஃபைசர் மற்றும் பயோ என் டெக் தடுப்பு மருந்து இரு டோஸ்களுக்கு இடையில் அதிகப்படியான இடைவெளி இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகபடியாக உருவாக்கும் என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள எட்டு வார இடைவெளி என்பது சிறந்ததாக இருக்கும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பிரிட்டனில் ஆல்ஃபா வகை கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த சமயத்தில், பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பை சேர்ந்த 503 ஊழியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்காணித்து 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில், ஒட்டுமொத்தமாக குறுகிய மற்றும் நீண்ட இடைவெளியில் இரு டோஸ்களை எடுத்து கொண்டவர்கள் இருவருக்குமே எதிர்ப்பு சக்தி நன்றாக உருவாகியிருந்தது என்று தெரியவந்துள்ளது. மேலும் 10 வார இடைவெளியில் உருவாகியிருந்த ஆன்டிபாடிகளை காட்டிலும் மூன்று வார இடைவெளியில் குறைவான ஆன்டிபாடிகள் உருவாகியிருந்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.