ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (21:38 IST)

தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

isrel- Palestine
இஸ்ரேல்-காஸா இடையிலான போரில் ஒருவார கால இடைக்கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. கடந்த மூன்று நாட்களாக தீவிரமான குண்டுவீச்சு நடந்ததைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலிய தரைப்படைகள் காஸாவின் அனைத்து பகுதிகளிலும் முன்னேறி வருவதாகத் தெரிவித்திருக்கின்றன.
 
இஸ்ரேல் காஸா மீது ஒரு பெரிய அளவிலான குண்டுவீச்சு பிரச்சாரத்தை மறுதொடக்கம் செய்துள்ளது, இதை கான் யூனிஸ் வாசிகள் இதுவரை நடந்த தாக்குதல்களில் மிகப்பெரிய அலை என்று கூறியுள்ளனர்.
 
இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவை நோக்கி முன்னேறியிருக்கின்றன. தெற்கு காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ‘வலுவாகவும் முழுமையாகவும்’ போரிட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தளபதி கூறியுள்ளார்.
 
இஸ்ரேலிய ராணுவ வானொலியின் முதற்கட்டத் தகவல்களின்படி, கான் யூனிஸின் வடக்கே இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
 
இஸ்ரேலிய டாங்கி ஒன்று நகரை நெருங்கும் காட்சிகளையும் பிபிசி உறுதி செய்துள்ளது.
 
காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, குண்டுவெடிப்பு மீண்டும் தொடங்கியதில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
அரசாங்கத்தின் கூற்றுப்படி, போர் தொடங்கியதில் இருந்து 15,500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.
 
லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, காஸா பிரிவின் பாதுகாப்புப் படையினரிடம் இராணுவ நோக்கங்கள் மற்றும் ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேலிய ராணுவம் கொன்றது பற்றிப் பேசினார்.
 
மேலும் அவர் ராணுவத்தினரிடம், "நாங்கள் வடக்கு காஸா பகுதியில் வலுவாகவும் முழுமையாகவும் போராடினோம், இப்போது தெற்கு காசா பகுதியிலும் நாங்கள் அதைச் செய்கிறோம்," என்றார்.
 
இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், காசா முழுவதும் இஸ்ரேல் படைகள் ‘தரையில் ஊடுருவதை தொடர்கின்றன’ என்றும் துருப்புக்கள் ‘பயங்கரவாதிகளை நேருக்கு நேர் எதிர்த்துப் போராடுகின்றன,’ என்றும் கூறினார்.
 
இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.
 
ஞாயிற்றுக்கிழமை காலை கான் யூனிஸின் பல்வேறு மாவட்டங்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் வெளியேற்ற உத்தரவுகளை வழங்கியது, குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.
 
ஹமாஸ் தளபதிகள் நகரத்தில் மறைந்திருப்பதாக இஸ்ரேலிய போலிசார் நம்புகிறார்கள். அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் போரின் ஆரம்பக்கட்டங்களில் அங்கிருந்து தப்பி தெற்கில் தஞ்சமடைந்தனர்.
 
காசாவில் தங்கியிருக்கும் பிரிட்டிஷ்-பாலஸ்தீனியரான முகமது கலாயினி, நிலைமையை 'பேரழிவுக்கும் அப்பாற்பட்டது' என்று விவரித்தார்.
 
"மக்கள் 50 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக மிருகத்தனமான இஸ்ரேலிய தாக்குதலைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள், உணவு, தண்ணீர், மின்சாரம், மற்றும் சுகாதாரச் சேவைகள் என அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன," என்று அவர் பிபிசியிடம், தொலைபேசியில் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு கூறினார்.
 
மான்செஸ்டரைச் சேர்ந்த காற்று மாசுபாடு நிபுணரான இவர், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குச் சற்று முன்பு தனது தாயைப் பார்க்க மூன்று மாத பயணமாக காஸாவிற்கு வந்தார்.
 
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை ஐ.டி.எஃப் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து ஐ.நா அதிகாரி ஒரு "போர் மண்டலம்" என்று குறிப்பிட்டார்.பட 
 
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை ஐ.டி.எஃப் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து ஐ.நா அதிகாரி ஒரு "போர் மண்டலம்" என்று குறிப்பிட்டார்.
 
'போர் மண்டலமாகும்' மருத்துவமனைகள்
 
இஸ்ரேலிய ராணுவம் அதன் தாக்குதலின் மையத்தை தெற்கே நகர்த்திய பிறகு, காஸா மருத்துவமனையில் இதற்கு முன்பு பார்த்திராத பீதி பரவியிருப்பதாக ஒரு ஐ.நா அதிகாரி குறிப்பிட்டார்.
 
யுனிசெஃப் அதிகாரி ஜேம்ஸ் எல்டர், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ மருத்துவமனையை ‘போர் மண்டலம்’ என்று விவரித்தார்.
 
திரு எல்டர் பிபிசியிடம், நாசர் மருத்துவமனைக்கு அருகே தொடர்ந்து பெரிய வெடி சத்தம் கேட்கிறது என்றும், குழந்தைகள் தலையில் காயங்கள், பலத்த தீக்காயங்கள் மற்றும் சமீபத்திய குண்டுவெடிப்புகளில் இருந்து துண்டாகி வருகிறார்கள் என்றும் கூறினார்.
 
மேலும், " நான் வழக்கமாகச் சென்ற மருத்துவமனையில், குழந்தைகளும் குடும்பங்களும் என்னை இப்போது அடையாளம் கண்டுகொள்கின்றன. அதே நபர்கள் என் கையையோ அல்லது சட்டையையோ பிடித்துக்கொண்டு, ‘தயவுசெய்து எங்களை எங்காவது பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள்’ என்று என்னிடம் கெஞ்சுகிறார்கள். பாதுகாப்பான இடம் எங்கே இருக்கிறது?” என்றார்.
 
இஸ்ரேல் தாக்குதலால் இடிந்த தனது வீட்டிலிருந்து குர்ஆனை எடுத்துச்செல்லும் காஸா இளைஞர்
 
‘எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன’
போர் மீண்டும் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் தொடர்ந்து ஏவப்பட்டு வருகின்றன.
 
காஸாவின் வடக்குப் பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டதையடுத்து, கான் யூனிஸில் தஞ்சம் புகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.
 
சமீபத்திய ஐ.நா. அறிக்கையின்படி, 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காஸாவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் பிலிப்போ கிராண்டி, காசாவில் உள்ள பாலத்தீனியர்கள், "ஏற்கனவே மிகவும் குறுகியதாக இருக்கும் ஒரு பிரதேசத்தில், குறுகிய ஒரு மூலையை நோக்கி மேலும் மேலும் தள்ளப்படுகிறார்கள்," என்று பிபிசியிடம் கூறினார்.
 
இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசப்படும் பகுதிகளின் வரைபடங்களை ஆன்லைனில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த வரைபடங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் காசாவில் விமானம் மூலம் வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களை வெளியேறும்படி எச்சரிக்கும் என்று அது கூறுகிறது.
 
 
காஸாமீது இதுவரை 10,000 வான்வழித் தாக்குதல்கள்
ரெகேவ், பிபிசியின் லாரா குயென்ஸ்பெர்கிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பொதுமக்கள் தங்கள் இலக்குகள் அல்ல என்றால். மேலும், ஹமாஸ் ‘தனது பயங்கரவாத இயந்திரத்தை பொதுமக்களிடையே ஊடுருவ விடுவதால்’ அவர்களைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்றும் கூறினார்.
 
இஸ்ரேலிய ராணுவம் ‘மிகவும் கடினமான போர் சூழ்நிலையில் முடிந்தவரை தாக்குதல்கள் பற்றிய முன்னறிவிப்பை வழங்கியதாகவும்’ அவர் கூறுகிறார்.
 
காஸாவில் ஹமாஸால் பயன்படுத்தப்பட்ட 800 சுரங்கப்பாதை தடங்களில் 500-ஐ தகர்த்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
 
மேலும், போர் துவங்கியதில் இருந்து ‘பயங்கரவாத இலக்குகள்’ மீது தோராயமாக 10,000 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அது கூறியது.