செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (00:10 IST)

செல்பேசி பேட்டரி, டேட்டா விரைவாக தீருவது ஹேக்கிங்கின் அறிகுறியா?

உங்கள் மொபைல் பேட்டரி விரைவாக வடிந்து விடுகிறதா? செல்பேசி டேட்டா (இணையதள வசதி)விரைவாக தீர்ந்துவிடுகிறதா?
 
நீங்கள் கைப்பேசியில் அதிகம் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் டேட்டா ப்ளானை மாற்றுவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். அப்படி இல்லையென்றால், உங்கள் மொபைலை ஒரு ஹேக்கர் ஏதோ செய்கிறார் என்பதை குறிப்பதாகவும் அது இருக்கலாம்.
 
உங்கள் கைப்பேசி பாதுகாப்பில் இடையூறு செய்யப்படுவதால், உங்கள் அடையாளம் மற்றும் தனியுரிமை தரவுகளின் கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 
தற்போதைய காலகட்டத்தில் கைப்பேசிகளை ஹேக்கிங் செய்யும் முறைகள் மாறி வருகின்றன. கூடவே இப்போது ஹேக்கர்களைப் பிடிப்பதும் கடினமாகி விட்டது.
 
ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உங்கள் மொபைலை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
 
போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
உங்கள் கைப்பேசியில் அதிக டேட்டா செலவாகிறது என்றால் அது ஹேக்கிங்கின் அடையாளமாக இருக்கலாம் என்று நாங்கள் முன்பே குறிப்பிட்டோம்.
 
"செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு போல, அதிக டேட்டா செலவழிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் எப்போதும் போலவேதான் உங்கள் போனை பயன்படுத்துகிறீர்கள், ஆனால் டேட்டா நிறைய செலவாகிறது என்றால், நீங்கள் அதை ஆராய வேண்டும்," என்கிறது அமெரிக்க கணினி பாதுகாப்பு நிறுவனமான நார்டன்.
 
'உன் ஆபாசப் படம் என் வசம்' - அதிகரிக்கும் புதிய ஹேக்கிங் கலாசாரம்
ஹேக்கர்கள் கசியவிட்ட 53 கோடி ஃபேஸ்புக் பயனர் தகவல்கள்: உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?
 
"பேட்டரி எத்தனை செலவாகிறது என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் போனை நீங்கள் பயன்படுத்தும் முறை மாறவில்லை, ஆனால் பேட்டரி விரைவாக வடிந்து போய் விடுகிறது என்றால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்,"என்று நார்டன் மேலும் கூறுகிறது.
 
"ஹேக் செய்யப்பட்ட மொபைலில் உள்ள அனைத்து செயலாக்க சக்தியும் ஹேக்கரின் கைகளில் இருக்கும். எனவே உங்கள் கைப்பேசி மெதுவாக வேலை செய்யக்கூடும். சில நேரங்களில் அது வேலை செய்வதை நிறுத்தி விடும் அல்லது திடீரென்று ரீஸ்டார்ட் (மறுதொடக்கம்) ஆகும்," என்று மற்றொரு கணினி பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி எச்சரிக்கிறது.
 
காஸ்பர்ஸ்கி மற்றும் நார்டன் ஆகிய இரு நிறுவனங்களுமே, மொபைலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
 
மொபைலில் நீங்கள் நிறுவாத சில செயலிகள் இருக்கலாம் அல்லது நீங்கள் செய்ததாக உங்களுக்கு நினைவில் இல்லாத அழைப்புகள் காணப்படலாம்.
 
50 லட்சம் பேரின் தமிழ்நாடு ரேஷன் அட்டை விவரங்கள் திருட்டு: என்ன ஆபத்து?
சேலத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி - எப்படி தடுப்பது?
"உங்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் கவனம் செலுத்துங்கள். கடவுச்சொல் மாற்றம் செய்யும்படி அல்லது நீங்கள் போகாத வெவ்வேறு இடங்களிலிருந்து அறிவிப்புகள்(Notification) வருகிறதா என்பதை கவனியுங்கள்," என்று காஸ்பர்ஸ்கி தெரிவிக்கிறது.
 
மொபைலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?
உங்கள் போன் பல வழிகளில் ஹேக் செய்யப்படலாம். செயலிகளை பதிவிறக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், சிலவற்றில் வைரஸ்கள் இருக்கலாம். முடிந்தவரை நீங்கள் செயலியை கூகிள் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 
"உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் அல்லது செய்தியைப் பெற்றால், அந்த செய்தியில் உள்ள எந்த இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம், அவற்றில் வைரஸ் இருக்கலாம்."என்று நார்டன் சுட்டிக்காட்டுகிறது.
 
"புளூடூத் மற்றும் வைஃபை உதவியுடன் ஹேக்கர்கள் உங்கள் செல்பேசியை ஹேக் செய்வது எளிது. எனவே தேவைப்படாதபோது அவற்றை நிறுத்தி வைக்கவும்."என்று கணினி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃப் கூறுகிறது.
 
"நீங்கள் எப்போதும் உங்கள் போனை உங்களுடனேயே வைத்திருப்பது முக்கியம், உங்கள் சாதனத்தில் கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்கள், எல்லா நேரங்களிலும் செயலிகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள்," என்று காஸ்பர்ஸ்கி தெரிவிக்கிறது.
 
போன் ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?
முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிக்கும்போதிலும், மொபைல் ஹேக் ஆகும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மொபைலில் யாருடைய எண்கள் சேமிக்கப்பட்டுள்ளதோ அவர்களிடம் உங்கள் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், உங்கள் எண்ணிலிருந்து அனுப்பப்பட்ட எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சொல்லுங்கள் என்று நார்டன் அறிவுறுத்துகிறது.
 
 
ஹேக்கருக்கு உதவியதாக நீங்கள் நினைக்கும் எந்த ஒரு செயலி
யையும் அகற்றிவிடுங்கள். மொபைலில் ஆன்டி வைரஸ் மென்பொருளை போடவும் அறிவுறுத்தப்படுகிறது. அது சரியான நேரத்தில் வைரஸைக் கண்டறிந்து அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும். தொலைபேசியை மீட்டமைப்பதும்(Reset) ஒரு தீர்வாகும். இருப்பினும் இதனால் தரவுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
 
இறுதியாக நீங்கள் அனைத்து கடவுச்சொற்களை மாற்றுவது மிகவும் முக்கியம். போன் ஹேக் ஆகியிருந்தால் கடவுச்சொல் வெளியாகும் அபாயம் உள்ளது.