1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (11:16 IST)

"சுகாதார அவசர நிலை, ரத்து செய்யப்பட்ட திருவிழா" - கடந்த 24 மணி நேரங்களில் நடந்தவை

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 2462 பேர் பலியாகி உள்ளனர். 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸுடன் ஒப்பிடும் போது பலி  எண்ணிக்கை மிகவும் அதிகம். சார்ஸ் நோயின் காரணமாக 774 பேர் பலியாகி இருந்தனர்.
சர்வதேச அளவில் 78,810 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக  நடந்த தகவல்களைப் பார்ப்போம்.
 
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலக புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இத்தாலியில்தான் அதிக  எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 152 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
 
கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளது சீனா. சீனாவுக்கு அடுத்ததாக தென் கொரியாவில் மிக அதிகளவில்  கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.
தென் கொரியாவில் இதுவரை ஆறு பேர் பலியாகி உள்ளனர். 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இரானில் 43 பேருக்கு  கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
 
பிலிப்பைன்ஸில் ஒரே இடத்தில் 200 இணையர்களுக்கான திருமணத்தை அரசு ஒருங்கிணைத்து இருந்தது. கொரோனா வைரஸ் அச்சமாக 200 ஜோடிகளும் முகமூடி  அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது.  இதுகுறித்து சென்னை இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா, "கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாகக் கடைகளில் கோழிக்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது, என்றார்.