வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (13:13 IST)

'கலைஞர்' கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு

கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக

1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம்.

1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.

1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.

1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன்.

1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம். மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின், செல்வி ஆகியோர் இவர்களது பிள்ளைகள்.

1949 செப்டம்பர் 18: திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்படுகிறது.

1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.

1952: கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய `பராசக்தி` படம் வெளியானது.

1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.

1957: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

1959: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100-க்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மாநகராட்சியைக் கைப்பற்றியது.

1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.

1963: திமுக நடத்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற மு. கருணாநிதிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை.

1965 பிப்ரவரி 16: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதி விடுதலையானார்.

1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.

1971 மார்ச் 15: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1972 அக்டோபர் 14: திமுக-வில் இருந்து எம்.ஜி. ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.

1974 ஆகஸ்ட் 15: மு. கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் கருணாநிதி.

1976 ஜனவரி 31: கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.

1986: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் (டெசோ) மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.

1988: வி.பி. சிங்கை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் இணைந்து, மத்திய கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது.

1989: எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 3-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1991 ஜனவரி 30: திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

1996: சட்டமன்ற தேர்தலில் வென்று, 4-ஆவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.

2001 ஜூன் 30: 2001-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தமிழகக் காவல்துறை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2006: சட்டமன்ற தேர்தலில், 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி.

2008-2009: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இந்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை என கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2010 மார்ச்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் - சட்டமன்ற கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

2010 ஜூன்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார் கருணாநிதி.

2011: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.

2013: தனக்குப் பிறகு, தனது அரசியல் வாரிசாக தனது மகனும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இருப்பார் என அறிவித்தார் கருணாநிதி.

2014-16: 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது.

2016 அக்டோபர் 25: கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக உறுதிப்படுத்தியது.

2016 டிசம்பர் 1: உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

டிசம்பர் 15: மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்றுக்காக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டது.

2017 டிசம்பர் 16: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.

2018 ஜூலை 27 நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
 

ஆகஸ்ட் 7: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.