வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:30 IST)

போலிச் செய்திகள்: உண்மை சரிபார்த்தல் மற்றும் உறுதிப்படுத்துதல்

போலிச் செய்திகளை உருவாக்கும் நபர் அது போலிச் செய்தி என்று தெரிந்தே அதை உருவாக்குகிறார். இப்போது போலிச் செய்தியை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மேலே குறிப்பிட்டுள்ள விவரிப்புகளில் ஏதாவது ஒரு வகையிலான தகவல் வரும் போது, ஒவ்வொரு குடிமக்களும் அந்தத் தகவலை ஏற்கும் நிலையில் இருக்கிறார் என்று நாங்கள் சொல்ல வரவில்லை. ஆனால், தகவல்களில் கணிசமானவை கவனிக்கப்படுவதில்லை - எனவே, போலிச் செய்தித் தகவல்களைப் பெறக் கூடிய அனைவரும் அதைப் பார்க்கிறார்கள் என்பது கிடையாது.
 
தகவல்களைப் பெறுபவர்களில் போலிச் செய்தித் தகவல்களை அறியக் கூடிய இரண்டு வகையான குழுவினர் உள்ளனர். முதலாவது குழுவினர், ஆழமான செய்திகளை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். வெளிப்படையாகத் தெரியும் போலிச் செய்திகளை அவர்களால் கண்டறிய முடியும். உதாரணமாக, கீழே உள்ள படத்தில் உள்ளதைப் போன்றவை. ஊடகங்களில் போலிச் செய்திகள் பற்றி விவாதங்கள் நடப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சில நேரங்களில் போலிச் செய்தித் தகவல்களில் அமைப்பு அம்சங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் (உதாரணம் நிறைய ஆச்சர்யக் குறிகள்; நிறைய தகவல் விஷயங்கள்) அல்லது சாத்தியமற்றவை என எளிதாகக் குறிப்பிடுவார்கள் (உதாரணம் ``உண்மையாக இருக்க வாய்ப்பில்லை'')
 
 
``ஜெட் ஏர்வேஸ் குறித்த இந்தச் செய்தியை நிறைய பேர் பகிர்கிறார்கள். இதெல்லாம் போலிச் செய்திகள் என எனக்குத் தெரிகிறது. எதுவும் நமக்கு இலவசமாக கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இலவசமாக iPad கிடைக்கும் என்று முதன் முறையாக எனக்கு இதுபோல இமெயில் வந்தபோது, முதன்முறை அதை நம்பி பலருக்கு பார்வர்டு செய்தேன். அது போலியானது என சிலர் எனக்கு சொன்னார்கள். அதன்பிறகு இதுபோன்ற தகவல்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டேன்'' (பெண், 50, சென்னை)
 
போலிச் செய்தித் தகவல்களைக் கண்டறியக் கூடிய மற்றொரு குழுவினர் இளம் குடிமக்கள். டிஜிட்டல் தளங்களை அறிந்து வளர்ந்துள்ளவர்கள். ஒரு விஷயத்தை `வைரலாக்குவது' பற்றி அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கருத்தைப் பார்த்ததும் கிளிக்பெய்ட் ஐடியா (ஒரு லிங்க் -ல் கிளிக் செய்ய வைப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் பயன்படுத்துவது, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை தலைப்பாக தருவது) என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். போலியாக இருக்க வாய்ப்புள்ள தகவல்களை அறிவதற்கு, அதில் உள்ள சில குறியீடுகளையும் அறிந்துள்ளனர். உதாரணமாக, குறிப்பிட்ட பிராண்ட் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கும், பகிருமாறு வெளிப்படையாக, திரும்பத் திரும்ப வலியுறுத்தப் பட்டிருக்கும், மொழி பயன்பாட்டு அறிகுறி (உதாரணம் நல்ல / மோசமான ஆங்கிலம்) அல்லது வெட்டி ஒட்டப்பட்ட படங்கள்.
 
செல்போன்களை ஆப் செய்து வைக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தும் போலிச் செய்தி. அவ்வாறு செய்யாவிட்டால் காஸ்மிக் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறும் செய்தி. நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காக `CNN', `BBC', `Google' மற்றும் `NASA' பெயர்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதை கவனிக்கவும். தகவலைப் பெறுபவர்களில் பலர் இது போலியானது என்று கண்டறியக் கூடிய தகவல்களில் ஒன்றாக இது இருக்கிறது.
 
V.2. உறுதிப் படுத்துதல் - மற்றும் Google -ஐ மிக குறிப்பாக பயன்படுத்துதல்:
 
சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் தகவல்களை குடிமக்கள் சரிபார்ப்பது பொதுவாக குறைவாகவே உள்ளது. பெறப்படும் தகவல்களை குடிமக்கள் சரிபார்க்கும் உந்துதலை ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் இருக்கின்றன - பெரும்பாலும் இதற்குப் பயன்படுத்தும் வழிமுறை Google ஆக இருக்கிறது (இந்தியாவில் தேடுபொறி என்றாலே Google என்றாகிவிட்டிருக்கிறது). சாதாரணமாக செய்தி நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் தொடர்பானதாக இது இருக்கிறது (உதாரணம்- கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரபலங்கள் எவ்வளவு தொகை நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்; விவசாயிகள் போராட்டங்கள்); தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்புகள் (`எனது தனிப்பட்ட ஆர்வம் உள்ள சில விஷயங்கள்'); அல்லது நடைமுறையில் பயன்பாட்டுக்கு உரிய வரம்பில் வரக் கூடிய விஷயங்கள் (உதாரணம் - பல்வலி தீருவதற்கு நான் எதைப் பயன்படுத்தலாம்). Google மீதான `நம்பிக்கை' உண்மையில் அதிகமாகவே இருக்கிறது. இந்த நடைமுறை பயன்பாடுகளில் தான் நம்பிக்கை என்பது காட்சிக்கு வருகிறது.
 
``Google செய்திகள் ஒருபோதும் பொய்யாகாது. அதுதான் எங்கள் கடவுள். குழந்தைகளுக்கான பொருட்களுக்கும் கூட, முடியில் இருந்து ஊசியால் செய்யும் வேலை வரை நாங்கள் Google-ல் தான் தேடுவோம்'' (பெண், 33, டெல்லி)
 
மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் உள்ளன: மத்திய தகவல் ஆணையர்
 
போலி செய்திகளால் என்ன பாதிப்பு? சமாளிப்பது எப்படி?
செய்திகள் என்று வரும்போது, நிலைமை கொஞ்சம் மாறுபடுகிறது. கருத்துகளின் பல நிலைகள் காட்டுவதற்கான `பல இணையத் தொடர்புகள் ' Google -ல் உள்ளன (links) என்று - தியரி அளவில் - குடிமக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற நிலையில், நடைமுறையில், அந்த அனைத்து இணையத் தொடர்புகளையும் படித்துப் பார்க்கவோ அல்லது மாறுநிலை தகவல்களில் உள்ள விஷயங்களை சரிபார்க்க முயற்சிப்பதற்கோ அதிக நேரம் பிடிப்பதாக இருக்கிறது! உதாரணமாக, மோடி அரசின் சாதனைகள் என்ற விவரங்களைக் கொண்ட வாட்ஸப் தகவல்கள் எதுவுமே Google மூலம் சரிபார்க்கப் படுவது கிடையாது. டிஜிட்டல் தளங்களில் தகவல்களைப் பார்ப்பது மற்றும் பகிர்வது என்பது அந்த நேரத்தில் நடப்பதாகவும், தொடர்ந்து நடப்பதாகவும் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், உண்மையை சரிபார்த்தலுக்காக அது தடைபடுவது கிடையாது.
 
கோடிக்கணக்கான கருத்துகளை குடிமக்கள் பொறுமையுடன் சரிபார்த்து ஒரு முடிவுக்கு வருவது என்பது யதார்த்த உலகில் இரண்டு கொம்புகள் கொண்ட குதிரையைக் காண்பதைப் போல அரிதான செயலாக உள்ளது.
 
 
டிஜிட்டல் உலகின் முரண்பாடான விஷயம் என்னவென்றால், தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இன்னும் நம்பகத்தன்மையைப் பெற்றிருக்கின்றன என்பதுதான். குறிப்பாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மீது மற்றும் மேலும் குறிப்பாக பல மாநிலங்களில் மாநில தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நிறைய சிக்கலானதாகவே இருக்கிறது. ஒருபுறம் அவையெல்லாம் ஒருசார்பானவை என்றும் வணிகம் அல்லது அரசியல் சார்பானவை என்றும், அவற்றில் பலவும் `விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன' என்றும் கூறுகிறார்கள். ஒருசார்பாக இருக்கிற காரணத்தால், அவை `முழுமையான செய்தியை' அளிப்பது இல்லை என்று குடிமக்கள் நம்புகிறார்கள். அந்த நேரத்தில் `போலிச் செய்திகளை' அளிப்பவர்களாக தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அதே சமயத்தில், மிக மோசமான / வெளிப்படையான பொய்களை அவை அளிக்காது என்றும் பார்க்கப் படுகிறது. தொலைக்காட்சி சேனல்களின் செய்திகள் பற்றி குடிமக்கள் உள்ளுணர்வைக் கொண்டு தீர்மானிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பொய்களே தருவது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்ற முடிவுக்கு வருகிறார்கள். தொலைக்காட்சி செய்தியில் உள்ள விஷயங்கள் அனைத்துமே முகம் தெரிந்த மக்கள் அல்லது பிரபலஸ்தர்கள் என்பதும், ஆன்லைன் / டிஜிட்டல் தகவல்களில் அது பெரும்பாலும் `முகமறியாத'103 நிலையில் இருக்கும் என்பதும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக உள்ளது.
 
மேலும் முக்கியமாக, தொலைக்காட்சிக்குச் சாதகமாக இருக்கும் இன்னொரு விஷயம் அது காட்சி ஊடகம் என்பது தான். நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒரு விஷயம் உண்மையிலேயே நடந்திருக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு காட்சி ஆவணங்களை அதிக அளவில் குடிமக்கள் சார்ந்திருக்கிறார்கள்.
 
 
வாட்ஸப் மற்றும் முகநூலில் பெறப்பட்ட தகவல்களை சரிபார்ப்பதற்கு மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள் என்றாலும், பேரிடர்கள் தொடர்பான செய்திகள் வரும்போது, குறிப்பாக சர்வதேச நிகழ்வுகளாக அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அல்லது - ஆச்சர்யம் தராத வகையில் - பிரபலங்கள் பற்றிய செய்திகளாக இருக்கும்போது இவ்வாறு செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் நிகழ்வுகளை சரி பார்ப்பதற்காக தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காட்சிகள் வருவதை வைத்து அந்த நிகழ்வு நடந்திருக்கிறதா (அல்லது இல்லையா!) என்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்.
 
``R : அமிதாப்பச்சன் இறந்துவிட்டால், அவர் விபத்தில் சிக்கினார் என்று நீங்கள் கேள்விப்பட்டால், அது சரியா தவறா என்பதை சரி பார்க்க தொலைக்காட்சியைப் பார்க்கலாம்.
 
M : ஓகே, நீங்கள் அப்படி சரி பார்க்கிறீர்கள். சரி பார்ப்பதற்கு உங்களுக்கு வேறு ஏதும் வழிகள் இருந்தால்? உங்கள் செல்போனில் வந்த போலிச் செய்தி என்பதற்கான உதாரணம் ஏதாவது இருக்கிறதா?
 
 
பத்திரிகைகள்- மற்றும் இங்கே அச்சிட்ட பத்திரிகைகள் பற்றி பேசுகிறோம் - அதன் மீது இன்னும் அதிக நம்பகத்தன்மை இருக்கிறது. வேகமாக ஓடும் டிஜிட்டல் உலகில் நம்பகத்தன்மையின் பொறுப்புகளை அதன் மீதே சுமத்தும் நிலை உள்ளது. அது மெதுவாக தயாராவதால் அந்த நம்பகத்தன்மை வருகிறது! அச்சிட்ட பத்திரிகைகள் மறுநாள் தான் வருகின்றன என்பதால், செய்திகளை சரிபார்க்க அவற்றுக்குப் போதிய அவகாசம் இருப்பதாக குடிமக்கள் நினைக்கிறார்கள்!104
 
தற்செயலாக, BBC மற்றும் CNN போன்ற சர்வதேச செய்திச் சேனல்கள் ஒருசார்பாக இல்லாதவை என்றும், இந்திய தொலைக்காட்சிச் சேனல்களை பீடித்துள்ளவாறு கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுபவையாக இல்லை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவை `சர்வதேச' சேனல்கள் என்பதால் இந்திய விவகாரங்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும் என்றும் கருதுகிறார்கள். அதனால், இந்த நெட்வொர்க் -குகள் மீது அதிக நம்பகத்தன்மை இருந்தாலும், உண்மையை ஆய்வு செய்வதற்கு குடிமக்கள் இவற்றைப் பயன்படுத்துவதில்லை.
 

 
இந்தப் பகுதியில் முன்பே கருத்தாடல் செய்யப்பட்டவாறு, சில குடிமக்கள், சில சந்தர்ப்பங்களில் போலிச் செய்திகளை அடையாளம் கண்டு தீவிரமாக சரிபார்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த ஆய்வுத் திட்டத்துக்கு சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில், அதிகம் படித்தவர்கள், வருவாய் அதிகம் உள்ளவர்கள், அதிக அளவில் டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது அதிக அளவில் செய்திகளை கவனிப்பவர்கள் என்பதெல்லாம் போலிச் செய்திகளைப் பகிர்வதில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்று பொதுவாக நாங்கள் வாதிடுவோம். குறிப்பாக, ஒருவருடைய சமூக அரசியல் அடையாளங்களுக்கு ஒத்திசைவானவற்றில் இது பொருந்தி வரும்.
 
இந்தத் தகவல்களின் உண்மையை ஆய்வு செய்வதைத் தடுப்பதாகவும் இது இருக்கிறது. நடைமுறையில், `உண்மையை கண்டறிதல்' என்று கருதப்படுவது உண்மையைக் கண்டறிவதாக அல்லாமல் - நம்பிக்கையை உறுதி செய்தல் - என்ற புதிய வார்த்தைகளை உருவாக்குவதாக இருக்கிறது. மறுக்கும் வகையிலான விவரிப்புகள், அது ஜோக்குகளைப் போன்றதாக இருந்தாலும், இதை கண்காணிக்கும் வாட்ஸப் அட்மின்கள் விரைவாக அதை நிறுத்திவிடுகிறார்கள்.
 
இந்தப் போக்குகள் அரசியல் வலதுசாரியாகவோ அல்லது இடதுசாரியாகவோ இருப்பது பற்றிய நிலைப்பாட்டுடன் தொடர்பு கொண்டவையாக இல்லை. மனிதர்களின் உணர்ந்தறியும் தன்மைகளைப் பற்றியதாக அது உள்ளது. சில தகவல்களின் விவரிப்புகளின் ஒத்திசைவுகள், அந்த வகைப்பாட்டில் உள்ள தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. இந்தத் தகவல்களை உருவாக்குவது மற்றும் பரவச் செய்வது பற்றியதாக இருக்கிறது.