1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (14:11 IST)

வேதா இல்லம் அரசுடைமையாக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு - ஈபிஎஸ்!!

வேதா இல்லம் அரசுடைமையாக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி. 

 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் இந்த பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது “அம்மா கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் மருத்துவர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் பணியில் இருந்து நிறுத்தக் கூடாது. அம்மா உணவகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை குறைக்காமல் பழையபடி முழு சம்பளம் வழங்க வேண்டும்.
 
வேதா இல்லம் அரசுடைமையாக்க, அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். சேலத்தில் வீடு விழுந்து 6 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை தற்காலிகமாக தங்க இட வசதி செய்து தரவேண்டும். இறந்தவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது இதை 15 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.
 
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதனால் மீண்டும் சேத மதிப்பு கணக்கிட்டு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். மழை காலத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று எனக்கு தகவல் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உடனே வழங்க வேண்டும்.
 
அதே போல கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது என கேள்விப்பட்டேன். நெல் மழையால் வீணாவதை உடனே தடுக்க வேண்டும். ஏற்கனவே மழை பெய்திருந்தது. அதனால் கூடுதலாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் இறைத்து இருக்கலாம். சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு கேட்கும் நிதியை வழங்கவேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.