வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (21:56 IST)

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் மேலும் 10 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் மேலும் 10 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு
பிரிட்டனில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு அங்கு பலியாோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. 82 வயது மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.
 
ஆப்பிரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்தியாவின் மும்பையில் இருந்து ருவாண்டா சென்ற இந்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ருவாண்டாவின் அரசு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதோடு, பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
அதே போல ஆப்பிரிக்க நாடான நமிபியாவிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
 
ஸ்பெயின் - புதிதாக 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து மேலும் 1500 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதை சேர்த்தால் தற்போது வரை ஸ்பெயினில் மொத்தம் 5,753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில்தான் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
இரானில் ஒரே நாளில் 97 பேர் பலி
 
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
12,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரான் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த புதன் கிழமையன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இரான் அரசு இறுதி சடங்கு செய்ய குழிகளை தோண்டுவது போன்ற காட்சிகள் வெளியாகின.